கூட்டணிக் குழப்பம் மற்றும் வண்டி ரிப்பேர்.. விஜயகாந்த் பிரசாரம் திடீர் ரத்து!
கடலூர்: கடலூர் மற்றும் சிதம்பரம் தொகுதிகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்யவிருந்த பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது. இதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.
மேடை போட்டு, தோரணம் கட்டி எல்லா ஏற்பாடுகளையும் செய்த பின்னர் கடைசி நேரத்தில் கேப்டன் வர மாட்டார் என்று கூறி விட்டார்கள். இதனால் கேப்டனின் பேச்சைக் கேட்க படு ஆவலாக காத்திருந்த தேமுதிகவினர் செம அப்செட்டாகி விட்டனர்.
விஜயகாந்த்தின் பிரசார வாகனம் ரிப்பேர் என்பதுதான், அவரது பிரசாரக் கூட்டம் ரத்தானதற்கு தெரிவிக்கப்பட்ட காரணம். ஆனால் மேட்டரே வேறு என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
நேற்று சாயந்திரம் 4 மணியளவில்...
நேற்று மாலை 4 மணிக்கு சிதம்பரம் மேலவீதியில் பா.ம.க. வேட்பாளர் கோபி என்கிற கோபாலகிருஷ்ணனை ஆதரித்தும், அதன் பிறகு மாலை 5 மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் ராமானுஜத்தை ஆதரித்தும் பிரசாரம் செய்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.
மேலவீதியில் தோரணம்.. மஞ்சக்குப்பத்தில் மேடை...
இதையொட்டி சிதம்பரம் மேலவீதியில் விஜயகாந்த்தை வரவேற்று அக்கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் விளம்பர பதாகை, கட்சி கொடிகள், தோரணங்களை கட்டி இருந்தனர். இதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பொதுக்கூட்டத்துக்கான மேடை அமைக்கும் பணி இரவு, பகலாக நடைபெற்று வந்தது.இதையொட்டி சிதம்பரம் மேலவீதியில் விஜயகாந்த்தை வரவேற்று அக்கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் விளம்பர பதாகை, கட்சி கொடிகள், தோரணங்களை கட்டி இருந்தனர். இதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பொதுக்கூட்டத்துக்கான மேடை அமைக்கும் பணி இரவு, பகலாக நடைபெற்று வந்தது.
எல்லாம் முடிஞ்சாச்சு...
நேற்று மேடை அமைக்கும் பணி பாதி முடிவடைந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் கடலூர், சிதம்பரத்தில் நடைபெற இருக்கும் 2 பிரசார கூட்டங்களும் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மதியம் 12 மணி அளவில் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
எல்லாத்தையும் கழட்டுங்கப்பா
கடலூரில் அக்கட்சியினர் அமைத்து வந்த விளம்பர பதாகைகள், கட்சி கொடிகள், தோரணங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேடை அமைக்கும் பணியும் பாதியில் நிறுத்தப்பட்டது.
வண்டி ரிப்பேராமே..
ஏன் பிரசாரம் ரத்தானது என்பது குறித்து மாவட்டச் செயலாளர் சிவக்கொழுந்து விளக்குகையில், கேப்டன் விஜயகாந்த்தின் பிரசார வாகனம் பழுதானதால் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது. கடலூர் பிரசார கூட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
ஆனால் மேட்டரே வேறு
ஆனால் நிலவரம் வேறு மாதிரியாக பேசப்படுகிறது. முதலில் கடலூர் தொகுதிக்கு பாமக சார்பில் கோவிந்தசாமி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். அதாவது பாஜக கூட்டணியில், பாமக சேருவதற்கு முன்பே அறிவிக்கப்பட்டவர் இவர்.
திடீரென பிடுங்கி தேமுதிகவிடம்
ஆனால் பாஜக கூட்டணியில் இந்தத் தொகுதியை தேமுதிகவிடம் ஒதுக்கி விட்டது பாஜக. இதனால் பாமகவினர் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே ஒட்டாத மன நிலையே நிலவுகிறது. இந்த நிலையில்தான் கூட்டத்தை ரத்து செய்துள்ளார் விஜயகாந்த். பிரசாரத்திற்கு வந்த இடத்தில் பாமகவினரால் பிரச்சினை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே அவர் வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
விஜயகாந்த்துக்கு உடம்பு சரியில்லையாமே
கூட்டம் ரத்தானதற்கு மேலும் பல காரணங்களும் கூறப்படுகின்றன. விஜயகாந்த்துக்கு உடம்பு சரியில்லை என்பது அதில் ஒரு காரணம்.
காசு போச்சே.. தேமுதிகவினர் வேதனை
விஜயகாந்த் திடீரென கூட்டத்தை ரத்து செய்ததால் பெரும் பொருட் செலவில் மேடை போட்டு, தோரணம் கட்டி, கொடி கட்டி, கட் அவுட் வைத்து செலவிட்ட காசெல்லாம் வீணாகி விட்டதாக தேமுதிகவினரும், பாஜகவினரும் வேதனை அடைந்துள்ளனராம்.