விகடன் தலைவர் பாலசுப்ரமணியன் உடல் மருத்துவமனையில் ஒப்படைப்பு
சென்னை: மறைந்த விகடன் குழும தலைவர் எஸ்.பாலசுப்ரமணியனின் உடல் மருத்து மாணவர்களின் ஆய்வுக்காக, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.
79 வயதான பாலசுப்ரமணியன் கடந்த வெள்ளிகிழமையன்று இரவு மாரடைப்பினால் காலமானார். மருத்துவம் படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தனது உடலை தானம் தரவேண்டும் என்ற அவரது விருப்பத்தின்படி அவரது உடல் நேற்று தானமாக அளிக்கப்பட்டது.
முன்னதாக அவரது உடல் போயஸ்தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சிவக்குமார் உள்ளிட்ட திரையலகினர், நக்கீரன் கோபால், சோ, தயாநிதி மாறன் உள்ளிட்டோர், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், பல்துறைப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து நேற்று இரவு எஸ்.பாலசுப்ரமணியன் விருப்பப்படி, அவரது உடல் மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக, சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.