கிராம உதவியாளர்களுக்கான போனஸை மறந்துட்டாரே ஓ.பன்னீர் செல்வம்!
தூத்துக்குடி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர்களுக்கு அரசால் பண்டிகை பணம் வழங்கப்படும். இந்தாண்டு தீபாவளிக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் போனஸ் பணம் வராததால் அவர்கள் திகைத்து வருகின்றனர்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. இதையடுத்து கிராம உதவியாளர்கள் கோவில்பட்டி தாலுகா அலுவகத்தை திடீரென முற்றுகையிட்டு வருகின்றனர்.
கிராம உதவியாளர் சங்க மாநில செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தங்கபாண்டி, செயலர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 100க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த தாசில்தார் முத்துராமலிங்கம் கிராம உதவியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். உடனடியாக முன்பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதி அளித்ததால் அவர்கள் அவசரமாக கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.