முதல் முறையாக கொடி ஏற்றி.. சுதந்திர தினத்தை விழா போல கொண்டாடிய புதுக்கோட்டை கிராமம்
ஒரு கிராமத்தில் இன்றுதான் முதன்முதலாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை: தேசிய கொடி ஏற்றுவதையே இன்னைக்குத்தான் ஒரு ஊர்ல மக்கள் பாத்திருக்காங்களாம். அந்த மக்கள் வேறு நாட்டை சார்ந்தவர்கள் கிடையாது. எங்கோ ஒரு வடமாநிலத்தை சேர்ந்தவர்களும் கிடையாது. நம்ம தமிழ்நாட்டுலதான். அதுவும் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகில் இருக்கிற உய்யக்குடிப்பட்டியில்தான்.
72-வது வருஷம் கழிச்சி இப்பவாவது தேசிய கொடி ஏற்றுவதை பார்த்தார்களே என்று சந்தோஷப்படுவதா? 72-வருஷமா இவங்க இந்த கிராமத்தில் இருந்துட்டு என்னதான் பண்ணிட்டு இருந்தாங்க என்று நினைத்து வேதனைப்படுவதா?
ஆரம்ப பள்ளி துவக்கம்
இந்த ஊர்ல எல்லாமே ஆச்சரியமாகத்தான் உள்ளது. இந்த வருஷம்தான் இந்த ஊருக்கு ஒரு ஸ்கூலே வந்திருக்கு. இந்த ஊரில் உள்ள கலையரங்கம் ஒன்றில்தான் இந்த பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. அதுவும் ஆரம்பப் பள்ளிதான். இந்த ஸ்கூல் வர்றதுக்கு முன்னாடி அந்த ஊர் பிள்ளைங்க எல்லாம் 4 கிலோ மீட்டருக்கு தள்ளி இருக்கிற வேற ஸ்கூல்லதான் போய் படிச்சிட்டு வந்தாங்க. இப்போ இந்த புது ஸ்கூலுக்கு எந்த டீச்சர்களும் இன்னும் நியமிக்கப்படவில்லை.
முதல் சுதந்திர தினம்
பக்கத்து ஊர்ல வேலை செய்துக்கிட்டிருக்கிற டீச்சர்கள்தான் அப்பப்போ வந்து மாற்றுப்பணி மூலமா வந்து வேலை பார்த்துட்டு இருக்காங்க. அதனால இன்னைக்கு கொண்டாடறதுதுதான் இந்த ஊருக்கும், பள்ளிக்கும் முதல் சுதந்திரதினம். முதல்முறையாக இன்றைக்கு அந்த ஊரில் ஏற்றப்பட்ட தேசியக்கொடியை பார்த்ததும் கூடியிருந்த கிராம மக்கள், பள்ளி குழந்தைகள் என அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மைக்செட் - அசத்தல்
முதன்முதலாக கொண்டாடப்படும் விழா என்பதால், அதனை கிராம மக்கள் ஒரு திருவிழா போலவே நடத்தி அசத்தி விட்டார்கள். தங்கள் கைகாசு போட்டு கிராமத்தையே அலங்காரப்படுத்தி விட்டனர். மைக் செட் போட்டு பாட்டெல்லாம் கிராமம் முழுக்க ஒலிக்குமாறு செய்தனர். கடலைமிட்டாய், மற்றும் சாக்லேட்டுகளை வாங்கி ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக் கொண்டனர். கூடவே டான்ஸ், பாட்டு என்று மாணவர்களின் கலக்கல்ஸ் வேறு.
பெரும் பாக்கியம்
இது பற்றி பள்ளியின் ஆசிரியர் திருப்பதி கூறும்போது ''மக்களிடம் சுதந்திர தினம் பற்றி விரிவாக கூறியபோது அவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். விழாவுக்கு தேவையானதை சொன்னதும் உடனடியாக அனைத்து உதவிகளையும் செய்தனர். நிகழ்ச்சிகளை மாணவர்களே நடத்துவதற்கு தயார் செய்திருந்தேன். அதேபோல் கலை நிகழ்ச்சிகளை மாணவர்களே தொகுத்து வழங்கினர். இந்த ஊருக்கு முதல் சுதந்திரதின தேசியக்கொடியை ஏற்றி வைத்ததை என் வாழ்வின் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்'' என்றார். நிகழ்ச்சியின் நிறைவில் அவர் புங்கை மரக் கன்றையும் நட்டார்.
முதல் கொடி பறக்கிறது
அந்த ஊரை சேர்ந்த முருகேசன் என்பவர் கூறும்போது '' விழாவினை சிறப்பாக நடத்துவது பற்றி திட்டமிட்டோம். அதன்படி தேசியக்கொடி மற்றும் வண்ண அலங்கார காகிதங்கள் வாங்கி விழா நடக்கும் இடத்தை அழகுபடுத்தினோம். அனைத்துச் செலவுகளையும் ஊர்பொதுமக்களாகிய நாங்களே ஏற்று கொண்டோம். எங்கள் பிள்ளைகள் நல்ல கல்வியை பெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை. எங்கள் பிள்ளைகள் வெகுதொலைவில் சென்று கால்வலிக்க படித்ததற்கு தற்போதுதான் பலன் கிடைத்திருக்கிறது. நம்நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் தற்போதுதான் முதல்முறையாக எங்கள் ஊரில் தேசியக்கொடி பறக்கிறது'' என்று அவர் சொல்லும்போது அவர் கண்கள் மகிழ்ச்சியில் கலங்கின. அதுமட்டுமல்ல, சட்டையில் குத்திக்கொள்ளும் தேசியக்கொடியை அவர்கள் கைகளில் கொடுத்ததும் புதிய உலகை பார்ப்பதுபோல பார்த்தார்களாம்.
விடியல் கிடைத்துள்ளது
விழா பற்றி சுப்பிரமணியன் என்பவர் கூறும்போது ''பல ஆண்டு கோரிக்கைக்கு பின்பு, அரசு எடுத்த முயற்சியால் இந்த ஆண்டு எங்கள் ஊருக்கு பள்ளிக்கூடம் கிடைத்தது. அந்த மகிழ்ச்சியின் காரணமாக, படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் எழுதுவதற்கு நோட் வாங்கிக் கொடுத்தேன். எங்கள் ஊரிலும் பள்ளிக்கூடம் இருப்பது எங்களுக்கு கிடைத்த வரமாக கருதுகிறோம். மழைக்காலங்களில் வெளியூரில் சென்று படிப்பதற்கு சிரமப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இந்த ஆண்டு முதல் விடியல் கிடைத்திருக்கிறது'' என்றார்.
எங்கள் புண்ணியம்
இப்படி சுதந்திர தினத்துக்காக சொந்த செலவு செய்ததில் ஆகட்டும், தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் ஆகட்டும், கிராம மக்களின் ஒத்துழைப்பும், முயற்சியும் பாராட்டுக்குரியது. எல்லாவற்றிற்கும் மேலாக இப்படி ஒரு அரசு விழாவினை சொந்த செலவில் திருவிழா போல திருவிழா சிறப்பாக செய்து முடித்ததை எங்களுக்கு கிடைத்த புண்ணியம் என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார்கள் இவர்கள். ஒரு சுதந்திர தினத்தின் உண்மையான வெளிப்பாடு இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இன்று நடத்தி காட்டியிருக்கிறார்கள் உய்யக்குடிப்பட்டி மக்கள்.