யாரு ராசா நீ.. இந்த போடு போடுறானே.. என்னா ஒரு அடி.. நல்லா படிடா தம்பி.. நாட்டுக்கே தலைவனாகலாம்!
கிராம வாழ்க்கை புகழும் சிறுவனின் வீடியோ வைரலாகிறது
Recommended Video
சென்னை: "இந்த சின்ன வயசுல இவ்வளவு முதிர்ச்சியான பேச்சா" என்று வியக்க வைத்து வருகிறான் சிறுவன்.. அதனால், இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து "யாருப்பா நீ" என்று கேட்டு வருகிறார்கள்!!
எந்த ஊர் சிறுவன் என தெரியவில்லை.. பள்ளி மாணவர்கள் ஓரிடத்தில் குழுமி உள்ளனர்.. நிகழ்ச்சிக்காக ஒருங்கிணைந்தது போல தெரிகிறது.. அப்போது ஒருவர் அங்கிருக்கும் ஒரு சிறுவனை பேட்டி எடுக்கிறார்.. கிராமம் ,நகரம் இடையேயான வேறுபாடுகள், பள்ளி படிப்பு, விவசாயம் பற்றின கேள்விகள் கேட்கிறார்.. சாதாரண கேள்விகள்தான்.. ஆனால் ஒவ்வொரு பதிலும் அசாதாரணமாக வந்து விழுகின்றன.. தங்கு தடையில்லாமல், பிசிறில்லாமல், வெகு இயல்பாக, சரளமாக, அதே சமயம் ஆணித்தரமாக தன் கருத்தை இந்த மாணவன் எடுத்து வைக்கிறார். அந்த வார்த்தைகள் இவைதான்:
இயற்கை
"பனைவெல்லம்ல எப்படி செய்வதென்று கத்துக்கிட்டேன்.. அதை நாம கத்துக்கிட்டால் நாமளே செய்யலாம்.. படிச்சிட்டு எத்தனையோ பேருக்கு வேலை கிடைக்காம கஷ்டமா இருக்கு.. அதுக்கு பதிலா இதை செய்யலாமே? இந்த உலகத்தை இயற்கையா பார்க்கணும்னு எனக்கு ஆசை... எல்லா மக்கள் மேலயும் அன்பு செலுத்தணும்.. சிட்டியில நிறைய பிரச்சனை இருக்கு.. தண்ணி, புகை, வண்டிங்க.. நைட் எல்லாம் தூங்கவே முடியாது.
குயில், மயில்..
அதுக்கு பதிலா கிராமத்தில இருந்தால், குயில் சத்தம் கேட்கலாம், மயிலை பார்க்கலாம்.. கரும்பு உடைச்சி சாப்பிடலாம், நைட் நேரத்துல கோயில்ல போயி படுத்திட்டு இருக்கலாம்.. இப்படி அமைதியா இருக்கும் கிராமங்கள்... நிறைய பேர் படிச்சி முடிச்சிட்டு சொந்த கிராமத்தை விட்டு போறவங்களை நான் முட்டாளாதான் பார்க்கிறேன்..
பனங்காய்
விவசாயம்தான் சரி.. விவசாயம் இருந்தால்தான் வளர முடியும்.. சிட்டியில விவசாயம் தளர்ந்து போச்சு.. விவசாயி கீழே, பணக்காரன் மேல..ன்னு ஆயிடுச்சு.. ஆனால், என்னை கேட்டால் சிட்டியில இருக்கிறவங்கதான் கீழே.. அங்க பனங்காயை 200 ரூபாய் சொல்றாங்க, ஆனா நாங்க இங்க சும்மாவே பறிச்சு நம்ம இஷ்டத்துக்கு சாப்பிடலாம்.. எங்க ஊர்ல இதை யாருமே எதுவுமே சொல்ல மாட்டாங்க.
காசு மட்டும்தானா?
கிராமத்துல இருக்கிறவங்க, கிராமத்துலயே தொடர்ந்து வாழலாம்..வேப்ப மரம், ஆலமரம், இப்படி மரங்களில் இருந்து பல்குச்சிகூட வெட்டி விற்கலாம்.. காசு இருந்தால் மட்டும்தான் வாழ்க்கைன்னு நினைச்சுட்டு இருக்காங்க நிறைய பேரு... காசே இல்லாமல் இருந்தாலும் வாழ்க்கை நமக்குன்னு தேடி வரும்.. இயற்கைன்னு ஒன்னு இருக்கு.. அது நமக்கு ஒருநாள் கண்டிப்பா உணர்த்தும்!" என்கிறார் இந்த மாணவன்!
|
நம்மாழ்வார்
யாரும் சொல்லி தந்ததுபோலவோ, அல்லது முன்கூட்டியே தயார் செய்து வைத்து கொண்டு பேசுவது போலவோ இந்த சிறுவனின் பேச்சு தெரியவில்லை.. அதனால்கள் அந்த வரிகள் நம்மை மலைக்க வைக்கின்றன... வியக்க வைக்கின்றன.. கிராமத்து வாழ்வை இதைவிட அழகாகவும், எளிமையாகவும் உணர்த்திவிட முடியாது.. இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.. இந்த பேச்சை கேட்க நம் அப்துல்கலாமும், நம்மாழ்வாரும் உயிருடன் இல்லாமல் போய்விட்டனரே என்றுதான் நமக்கு வேதனையாக உள்ளது!!