இரை தேடி வந்து மின்சாரம் தாக்கி இறந்த குரங்கு.. அடுத்து நடந்தது நெஞ்சை நெகிழ வைக்கும்!
இறந்த குரங்கிற்கு இறுதி சடங்கு செய்யப்பட்டுள்ளது.
ஆம்பூர்: இறந்த குரங்கு ஒன்றிற்கு இறுதி சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்பூர் அருகே மிட்டாளம் வன்னியநாதபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெரும்பாலும் விவசாய நிலங்கள்தான் அதிகம் உள்ளது. மேலும் அதன் பக்கத்திலேயே வனப்பகுதியும் இருக்கிறது.
விவசாய நிலங்கள்
இந்த வனப்பகுதியில் இருந்து நிறைய வன விலங்குகள் அடிக்கடி இரை தேடி விவசாய நிலத்திற்கு வந்துவிடும். அங்கு சிதறி கிடக்கும் உணவினை தின்றுவிட்டு விலங்குகள் மீண்டும் காட்டு பகுதிக்குள் சென்றுவிடும்.
உயிரிழந்த குரங்கு
அப்படித்தான் கடந்த திங்கட்கிழமை காலையும், வனப்பகுதியிலிருந்து குரங்குகள் கூட்டம் விவசாய நிலங்கள் உள்ள பகுதிக்கு வந்துவிட்டது. அங்குள்ள மரங்களில் இங்குமங்கும் தாவிக் கொண்டு இருந்தன. அப்படி மரத்திற்கு மரம் தாவும்போது, ஒரு குரங்கு அங்கிருந்த மின்கம்பியின் மீது தவறி விழுந்துவிட்டது. இதில் அங்கேயே மின்சாரம் தாக்கி அந்த குரங்கு உயிரிழந்தது.
பெண்கள் ஒப்பாரி
இதனை கண்ட வன்னியநாதபுரம் இளைஞர்கள் எல்லாம் ஒன்று கூடினார்கள். தங்களுக்குள் பணத்தினை வசூல்செய்து இறுதி சடங்கு செய்வதற்கான பொருட்களை எல்லாம் வாங்கி வந்தனர். பச்சை ஓலையில் பாடைகட்டி, இறந்த மனிதர்களுக்கு செய்வது போல குரங்கிற்கும் இறுதி சடங்கு செய்தனர். ஆனால் சடங்குகள் மொத்தத்தையும் ஊர் பெரியவர்கள் செய்தார்கள். இந்த இறுதி சடங்கில் பெண்களும் கலந்து கொண்டு ஒப்பாரி வைத்து அழுதனர்.
இறுதி ஊர்வலம்
பிறகு குரங்கின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. அதில் பட்டாசுகள் வெடித்து சிதறடிக்கப்பட்டன. மேளங்கள் கொட்டப்பட்டன. இறுதியாக குரங்கினை ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து அடக்கம் செய்தார்கள். குரங்கிற்கு இறுதி சடங்கை செய்ய இளைஞர்கள் மேற்கொண்டமனிதாபிமான செயலை சுற்றுவட்டார பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.