ஊரெல்லாம் வெள்ளம்.. ஒரு பக்கம் காவிரி.. மறுபக்கம் பவானி.. குடிக்க நீரில்லாமல் போராடும் பருவாச்சி!
குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு: சுதந்திரம் அடைந்து 72 வருஷங்கள் ஆனாலும் என்ன, எங்களுக்கு இன்னும் குடிக்க கூட தண்ணி இல்லையே என்று ஈரோடு மக்கள் புலம்பி புலம்பி இன்று போராட்டத்திலே ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள்.
ஒரு பக்கம் காவிரி ஓடுது... இன்னொரு பக்கம் பவானி ஓடுது... ரெண்டுத்துக்கும் நடுவில் மாட்டிக் கொண்ட ஒரு கிராமம்தான் தண்ணீர் இல்லாத போராட்டத்தில் இறங்கியுள்ளது.
அபாய எச்சரிக்கை
பவானியை அடுத்துள்ள ஒரு கிராமம் பருவாச்சி. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மாதமாகவே குடிநீர் வழங்கப்படவில்லையாம். இதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். நடவடிக்கை எதுவும் எடுத்ததாக தெரியவில்லை.
கரை புரண்டு ஓடும் ஆறுகள்
ஆனால் தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டமாக இருந்ததால், வாடகைக்கு வண்டியை பிடித்து பல கிலோ மீட்டர் சென்று விலை கொடுத்து குடிநீர் வாங்கியுள்ளனர். இப்படித்தான் 2 மாதமாக காசு கொடுத்து தண்ணீர் வாங்கி வந்திருக்கிறார்கள். கிராமத்துக்கு அருகிலேயே பவானி ஆறும், காவிரி ஆறும் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் எங்கள் மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை வேறு விடுத்துள்ளார்.
பணம் கொடுத்து குடிநீர்
கண்ணெதிரே வெள்ளம் பெருக்கடுத்து ஓடினாலும் குடிக்க தண்ணீர் இல்லாதது மிகவும் வேதனையாக உள்ளதாக அந்த கிராம மக்கள் கூறுகிறார்கள். எவ்வளவு நாள்தான் பணம் கொடுத்து குடிநீரை வாங்குவது? இதற்கு முடிவு என்னதான் என்று யோசித்து, போராட்டம் நடத்த முடிவு செய்துவிட்டார்கள். பவானி-அந்தியூர் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் இன்று காலை உட்கார்ந்து விட்டார்கள்.
சமாதான பேச்சு
மறியல் செய்து கொண்டிருப்பது பிரதான சாலை என்பதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து போலீசாரும், வட்டார வளர்ச்சி அலுவலரும் சம்பவ பகுதிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த துவங்கினார்கள். எப்படியாவது குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கிறோம் என சமாதானம் செய்து உறுதி தந்தனர். அதன்பிறகுதான் பொதுமக்கள் அந்த இடத்தைவிட்டு நகர ஆரம்பித்தார்கள்.
அவலத்தின் உச்சம்
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை வெளுத்து கட்டியும், 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தும், காவிரியிலும், பவானியிலும் வெள்ள நீர் கட்டுக்கடங்காமல் ஓடியும், அந்த ஆறுகளின் அருகிலேயே உள்ள கிராமம் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு போராட்டம் நடத்தியது அவலத்தின் உச்சமே!