அடுத்தடுத்து 8 பேர் மரணம் – ஊரைவிட்டு வெளியேறி தோப்பில் குடியேறிய மக்கள்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகி அருகே அடுத்தடுத்து 8 பேர் தொடர்ச்சியாக மரணமடைந்த காரணத்தினால் ஒட்டுமொத்த கிராம மக்கள் ஊரை காலி செய்துவிட்டு தோப்பில் குடியேறிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள கூலியம் ஊராட்சிக்குட்பட்ட அம்மனேரி கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் மழை வேண்டியும், பேய், பிசாசு தங்களை நெருங்கி விடக்கூடாது என்பதற்காக ஊரை காலி செய்து, அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் இருந்து, மாரியம்மனை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் அந்த கிராமத்தில் கடந்த சில மாதங்களில் 8 பேர் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். தெய்வ குற்றம் காரணமாக இது போல நடப்பதாகவும், அம்மனை வழிபட்டால் அனைவரும் நலமாக இருக்கலாம் என்றும் ஊர் பெரியவர்கள் கூறியிருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து நேற்று ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஊரை காலி செய்து விட்டு வெளியேறினார்கள். அவர்கள் தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் உள்ள தென்னந்தோப்பில் குடியேறினார்கள்.
இதற்காக பொதுமக்கள் தாங்கள் வளர்த்து வரும் ஆடு, மாடுகள், கோழிகள், நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளையும் அழைத்து சென்றனர். இதனால் அந்த கிராமத்தில் வீதிகள் வெறிச்சோடி கிடந்தன.
தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் மாரியம்மனுக்கு வழிபாடு நடத்த ஊருக்குள் திரும்பினர். முன்னதாக ஊர் மக்கள் அனைவரும் வெளியே சென்றதால், யாரும் ஊருக்குள் வராத வகையில் பக்கத்து ஊரைச் சேர்ந்த 15 பேர் ஊர் எல்லையில் காவல் பணியில் ஈடுபட்டனர்.