பவானியில் கரைபுரண்டு ஓடுது வெள்ளம்.. ஆனால் குடிக்க நீரில்லையே...!
ஆற்றுபகுதியை தோண்டி மக்கள் குடிநீர் எடுத்து வருகிறார்கள்.
ஈரோடு: பவானி ஆற்றில் ஒரு பக்கம் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஆனால் கிராம மக்கள் குடிக்க நீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
வைரமங்கலம் என்ற கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு எப்பவுமே பவானி ஆற்றில் இருந்துதான் குடிநீர் விநியோகம் செய்வது வழக்கம்.
மூழ்கிய இயந்திரங்கள்
போன வாரம் பவானி ஆற்றில் கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த கரைபுரண்ட வெள்ளத்தில் குடிநீர் எடுக்கும் இயந்திரங்களும் அடியோடு மூழ்கிவிட்டது. அந்த இயந்திரங்கள் இருந்ததற்கான தடம் கூட தெரியவில்லை. இயந்திரங்கள் மூழ்கிவிட்டதால் குடிக்க தண்ணீரின்றி கிராம மக்கள் அவதிப்பட்டனர். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளம் வடிய ஆரம்பித்தது.
புகார் மனுக்கள்
மின்மோட்டார்கள் வெளியே கண்ணுக்கு தெரிய ஆரம்பித்தன. தண்ணீரில் மூழ்கிய மோட்டார் எப்படி வேலை செய்யும்? அதனை சரி செய்வார்கள் என்று கிராம மக்கள் எதிர்பார்த்தால், ஒரு வாரம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகாரும், கோரிக்கை மனுவும் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கியும் விட்டார்கள்.
ஆற்றுப் பகுதியில் கிராம மக்கள்
எப்போது மின்மோட்டாரை சீர் செய்து எப்போது தங்களுக்கு தண்ணீர் வழங்குவது என மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. அதோடு எவ்வளவு நாளுக்குதான் குடிநீரின்றி கஷ்டப்படுவது என நினைத்த கிராம மக்கள் பவானி ஆற்று பகுதிக்கே வந்துவிட்டனர். எல்லோர் கையிலும் குடங்கள்.
ஊற்று நீரை எடுத்த மக்கள்
பவானி ஆற்று பகுதிக்கு வந்த மக்கள் அங்கு பள்ளங்களை தோண்ட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் அந்த ஊற்றில் வந்த நீரை குடங்களில் பிடித்து சென்று கொண்டிருககிறார்கள். ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடினாலும் குடிநீருக்காக மக்கள் ஊற்று தோண்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது.