உதயசூரியன் தாலியுடன் வலம் வரும் தீவிர திமுக விசுவாசிகள் கிராமம்... கடலூர் அருகே!
கடலூர்: கடலூர் மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் பெரும்பான்மையானோர் திமுக விசுவாசிகளாக உள்ளதால், அங்குள்ள திருமணமான பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தாலியில் உதய சூரியன் சின்னம் இடம் பெற்றுள்ளது.
கட்சிகள் இலவச திருமணங்கள் நடத்தி வைத்து, பெண்களுக்கு தாலி வாங்கித் தருவது அவ்வப்போது நடைபெறும் ஒன்று தான். ஆனால், கட்சியின் மீது கொண்ட தீராத பாசத்தால் தன் குடும்பத்து பெண்களுக்கு கட்சி சின்னத்தையே தாலியாக அணிவித்துள்ளனர் கடலூர் மாவட்டத்திலுள்ள மதுரா பட்டி கிராம ஆண்கள்.
விருத்தாசலத்தில் இருந்து 15 கிமீ தூரத்தில் உள்ளது இந்தக் கிராமம். கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராம மக்கள் பெரும்பாலானோர் விவசாயத்தைச் சார்ந்தே வாழ்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் திமுகவின் தீவிர விசுவாசிகளாம். கடந்த 1957-ம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட்ட போது, அப்போது கட்சிக்கு உதயசூரியன் வழங்கப்பட்டது. அப்போது காங்கிரஸூக்கும், திமுகவுக்கும் இடையே கடும் பகை இருந்த சூழலில் பலர், அண்ணாவின் பேச்சாலும், கருணாநிதியின் பேச்சாலும் ஈர்க்கப்பட்டு தீவிரமாகக் கட்சிப் பணியாற்றியுள்ளனர். கட்சியின் பிடிப்பால் ஈர்க்கப்பட்டு கட்சியின் தீவிர விசுவாசியானவர்கள், சுயமரியாதை திருமணம் செய்துகொண்டதோடு, தங்கள் மனைவிக்கு உதய சூரியன் சின்னம் பொருந்திய தாலியையே கட்டியுள்ளனர்.
அப்போது தொடங்கிய இந்த வழக்கை, தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கும் இவர்கள் கொண்டு சென்றுள்ளனர். அதாவது தங்கள் வீட்டுக்கு வரும் மருமகள்களுக்கும் உதயசூரியன் சின்னத்தையே தாலியாக அணியச் செய்கின்றனர்.
இந்த வழக்கத்தைத் தொடங்கி வைத்தவர் சுப்ரமணியன் என்பவர் தானாம். அவரைத் தொடர்ந்து ஹரிகிருஷ்ணன் என்பவர் தனது 4 மகன்களுக்கும் சுயமரியாதை திருமணம் செய்து வைத்து, உதய சூரியன் பொருத்திய தாலியையே அணியச் செய்துள்ளார்.
சமயங்களில் அதிமுகவினர் வீட்டில் பெண் எடுக்கும் சம்பவங்களும் நடைபெறுமாம். ஆனால், அப்போதும் வீட்டிற்கு வந்த மருமகளுக்கு உதயசூரியன் தாலியே அணிவித்துள்ளனர்.