ஓபிஎஸ் கிணறுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்.. காலிகுடங்களுடன் பெண்கள் உண்ணாவிரதம்
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நிலத்தில் உள்ள கிணறுக்கு எதிராக பெண்கள் காலிகுடங்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு சொந்தமான கிணறுகளால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறி பெரியகுளம் அருகே இன்று கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டத்தை பெண்கள் மற்றும் கிராம மக்கள் நடத்தி வருகின்றனர்.
தேனி பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் ஓபிஎஸ்ஸுக்கு சொந்தமான தோட்டத்தில் 200 அடி ஆழ கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. இவற்றால் அப்பகுதியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஓபிஎஸ்ஸுக்கு சொந்தமான கிணறுகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கிராம மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சமரசம் செய்து உரிய தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் அமைதி காத்து வந்தனர்.
முற்றுகை
இந்நிலையில், லட்சுமிபுரம் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் கிராம மக்கள் ஒன்று கூடி இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், ஓ. பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான கிணறை முற்றுகையிடவும் முயன்றனர்.
கைது
இதனைத் தொடர்ந்து, முற்றுகையைத் தடுக்க போலீசார் முயன்றனர். இதனால் கிராம மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றம் உருவானது. இதையடுத்து முற்றுகையிட முயன்ற ஆண்கள் சிலரை போலீசார் இழுத்துச்சென்று கைது செய்தனர்.
காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்
இந்நிலையில் இன்று லட்சுமிபுரத்தில் கடைகளை அடைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் அறிவித்தனர். அதன்படி இன்று கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காலிக் குடங்களுடன் பெண்கள் மற்றும் கிராமத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
பள்ளிச் சிறுவர் பங்கேற்பு
இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் வகையில், குழந்தைகள் யாரும் பள்ளிக்குச் செல்லவில்லை. அவர்களும் தண்ணீருக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் முதல்வருக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடப்பது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.