தடையை மீறி கோவையில் ரேக்ளா ரேஸ்... 15 கிராமங்களின் 80 மாட்டு வண்டிகள் பங்கேற்பு!
கோவையில் தடையை மீறி கிராம மக்கள் ரேக்ளா ரேஸ் நடத்தினர். இதில் சுற்றுவட்டாரங்களில் உள்ள 15 கிராமங்கள் பங்கேற்றன.
கோவை: கோவை அருகே தடையை மீறி ரேக்ளா ரேஸ் நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டரங்களில் உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த 80 மாட்டு வண்டிகள் பங்கேற்றுள்ளன.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா ரேஸ் உள்ளிட்ட போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்காவது தடை நீக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் உச்சநீதிமன்றம் நேற்று தற்போது தீர்ப்பு வழங்க முடியாது என கைவிரித்தது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தை நம்பினால் வேலைக்கு ஆகாது என்ற முடிவுக்கு வந்த தமிழர்கள் தங்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயங்களை தடையை மீறி நடத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் எட்டிமடையில் தடையை மீறி ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டாரங்களில் உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த 80 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
இந்தப்போட்டியை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். இதேபோல் நாகை மாவட்டம் சீர்காழியிலும் ஏராளமானோர் ரேக்ளா வண்டிகளுடன் பேரணியில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அனுமதி அளிக்காவிட்டால் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்றும் பேரணியில் ஈடுபட்டவர்கள் எச்சரித்தனர்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 5 கிராமங்களில் மாடு விடும் விழா நடைபெற்றது. வீரனூர், மேல் சோழங்குப்பம், கீழ்ப்பாலூர், ஆலத்தூர் உள்ளிட்ட 5 கிராமங்களில் மாடுவிடும் விழா நடைபெற்றது. இதனை ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.