கனிமவளம் தொடர்பான ஆய்வை கைவிடாவிட்டால் உண்ணாவிரதம்.. வேடசந்தூர் பகுதி மக்கள் கொந்தளிப்பு!
திண்டுக்கல் அருகே வேடசந்தூர் மலைப்பகுதிகளில் கனிமவளம் தொடர்பான ஆய்வை மத்திய அரசு கைவிடாவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என வேடச்சந்தூர் பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மலைப்பகுதிகளில் கனிமவளம் தொடர்பான ஆய்வை மத்திய அரசு உடனடியாக கைவிடாவிட்டால் உண்ணாவிரதம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர். இன்று நடைபெற்ற கிராம மக்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் - கரூர் மாவட்ட எல்லையில் உள்ள கருமலை, ரெங்கமலை பகுதிகளில் செம்பு, காரீயம், துத்தநாகம் உள்ளிட்ட கனிமவளங்கள் இருப்பதாக கூறி கடந்த சில மாதங்களாக மத்திய அரசின் நில அறிவியல்துறை அதிகாரிகள் இங்கு முகாமிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். இதற்காக 3 ஆயிரம் அடிவரை போர்வெல் அமைக்கும் பணிகள் ஆங்காங்கே போடப்பட்டு வருகின்றன.
இத்தனை ஆயிரம் அடிக்கு போர்வெல் அமைத்தால் நிலத்தடி நீர் காணாமல் போகும் எனக் கூறி விவசாயிகள் இந்த ஆய்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இந்த ஆய்வை தடுத்து நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடமும் வேடசந்தூர் சுற்றுவட்டார மக்கள் நேற்று முன்தினம் மனு அளித்தனர்.
50 கிராம மக்களின் கூட்டம்
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தேவிநாயக்கன்பட்டி மற்றும் குட்டம் கிராமம் கருமலை, ரெங்கமலை மற்றும் விவசாய நிலங்களில் இந்திய நில அறிவியல் துறை ஆய்வு நட்ததுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேவிநாயக்கன்பட்டியில் 50 கிராம மக்களின் கூட்டம் இன்று நடைபெற்றது.
ஊர் தலைவர்கள் பங்கேற்பு
இக்கூட்டத்திற்கு ஊர் கொத்துக்காரர் தென்றல் ஜெயக்குமார் தலைமை ஏற்றார். தி.மு.க. ஒன்றிய கழக செயலாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் முன்னிலை வகித்துப்பேசினார். கல்வார்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார்.
அரசியல் கட்சியினரும் பங்கேற்பு
கூட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், சி.பி.எம். மாவட்ட குழு உறுப்பினர் எம்.ஆர்.முத்துச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன், காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் சாமிநாதன், ம.தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் டி.ராமசாமி உட்பட அனைத்து கட்சியினரும் பங்கேற்றனர்.
உண்ணாவிரதம் இருக்க முடிவு
இந்தக் கூட்டத்தில் நில அறிவியல் துறை ஆய்வு திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் இல்லயென்றால் மக்களை திரட்டி வேடசந்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் 50-க்கும் மேற்ப்பட்ட ஊர்களில் இருந்து மக்கள் திரளாக பங்கேற்றனர்.