அமைச்சர் தம்பி கொலையில் கைதான பஞ்சாயத்து தலைவரை விடுவிக்க வேண்டும்: கலெக்டரிடம் மனு
திருவள்ளூர்: பால்வளத்துறை அமைச்சர் ரமணாவின் தம்பி கொலையில் கைது செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனை விடுவிக்க வேண்டும் என்று கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில் கடந்த 14-ஆம்தேதி அமைச்சர் பி.வி.ரமணாவின் தம்பி ரவி வெட்டி கொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்ற போது ஒரு கும்பல் வழிமறித்து கொலை செய்தது.
இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ரவி கொலை தொடர்பாக செவ்வாப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், நெமிலிச்சேரியை சேர்ந்த திருநாவுக்கரசு முதலில் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலையில் சென்னையை சேர்ந்த ‘புல்லட்' தாஸ் கும்பல் ஈடுபட்டு இருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையில் போலீசாரால் தேடப்பட்ட முருகன் போலீசில் சரண் அடைந்தார். அவருடன் நாகராஜ், சத்யா என்கிற செங்குட்டுவன், பாலாஜி ஆகியோரும் சரண் அடைந்தனர். இவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள்.
இந்த மூவரும் ரவி கொலையில் தொடர்புடையவர்கள் என முருகன் போலீசாரிடம் தெரிவித்தார்.இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். முருகனுடன் சரண் அடைந்த மற்ற 3 பேரிடமும் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்களுக்கு இந்த கொலைக்கு தொடர்பு இல்லாதது தெரிய வந்தது.
நாகராஜ், சத்யா, பாலாஜி ஆகியோர் உண்மையான குற்றவாளிகள் இல்லை என தெரிய வந்தது. ஆனாலும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கொலையில் தொடர்புடைய ‘புல்லட்' தாஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பஞ்சாயத்து தலைவர் வெங்கடேசனை விடுவிக்கக்கோரி செவ்வாப்பேட்டை கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
செவ்வாப்பேட்டையில் நடந்த மணல் கடத்தலை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தட்டி கேட்டதால் போலீசாருக்கும், அவருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. அதன் அடிப்படையில் வெங்கடேசன் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்திருப்பதாக கிராமத்தினர் குற்றம் சாட்டினர்.
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் வெங்கடேசனை விடுவிக்க வேண்டும் என்றும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.