குடிநீர் பாட்டிலை கண்டு பதறிய போலீசார்.. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
குடிநீர் பாட்டிலை கண்டு போலீசார் சற்று பீதியடடைந்தனர்.
ஈரோடு: சில நேரங்களில் நம்ம போலீசார் அளவுக்கு அதிகமாகவே யோசித்து உணர்ச்சிவசப்பட்டு விடுகின்றனர். ஈரோட்டில்கூட இப்படித்தான் ஒரு சம்பவம் நடைபெற்றது.
இங்கு வெட்டு காட்டு வலசு என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் வரும் தண்ணீர் சுத்தமாக இருப்பதில்லையாம். மாசு கலந்து வருவதால் குடிக்க முடியாமல் இப்பகுதி மக்கள் ரொம்பவே அவதிப்பட்டு வந்தனர்.
அரிப்பு நோய்கள்
இதுபோல அசுத்தமான தண்ணீர் வருவதற்கு காரணம் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் சாயப்பட்டறைகள் என்று அவர்கள் கூறுகின்றனர். அந்த பட்டறைகளிலிருந்து யாருக்கும் தெரியாமல் சாயக்கழிவு நீரை போர்வெல் மூலமாக நிலத்தில் கலந்துவிடுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இந்த சாய நீர் குடிநீருடன் கலந்து அதை தாங்கள் குடிக்கும்போது, அரிப்பு உள்ளிட்ட ஏராளமான நோய்கள் ஏற்படுவதாகவும் மக்கள் புலம்பி தீர்க்கின்றனர்.
சாயக்கழிவு தண்ணீர்
இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் நிறைய முறை புகார் அளித்து பார்த்தாச்சு.. ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் கலெக்டரிடம் புகார் அளித்து மனு கொடுக்கலாம் என ஆட்சியர் அலுவலகத்துக்கு மக்கள் திரண்டு வந்தனர். கலெக்டரிடம் புகார் சொன்னாலும் அதை அவர் நம்ப வேண்டுமே என்பதற்காக, பொதுமக்கள் வரும்போதே அந்த சாயக்கழிவு கலந்த தண்ணீரை பாட்டில்களில் நிரப்பி எடுத்து வந்தனர்.
பாட்டிலில் என்ன?
ஆட்சியர் அலுவலகத்தில் அனைவரும் பாட்டிலும் கையுமாக உள்ளே நுழைந்ததை அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் பதறிப்போய்விட்டனர். உடனடியாக விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். பாட்டிலில் என்ன? என்றனர். அதற்கு பொதுமக்கள், எங்கள் பகுதி சாயநீர் என்றனர். ஆனால் போலீசாரோ அதனை நம்ப மறுத்தனர்.
பரிசோதனை
கையில் உள்ள சாயநீரை பெட்ரோல் என நினைத்துவிட்டு அனைத்து பாட்டில்களையும் வேகவேகமாக வாங்கி கொண்டனர். மக்கள் எவ்வளவோ சொல்லியும் அதை போலீசார் நம்பவே இல்லை. அந்த நீரை எடுத்து பரிசோதித்து பார்த்தபின்னர்தான் தண்ணீர் என தெரிந்தது. அதன்பிறகுதான் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்லவே அனுமதிக்கப்பட்டனர். பார்ப்பதற்கு பெட்ரோல் போலவே இருக்கும் குடிநீரை பயன்படுத்தும் கிராம மக்களின் நிலை உண்மையிலேயே பரிதாபம்தான்!