முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை கண்டித்து லட்சுமிபுரத்தில் மனித சங்கிலி போராட்டம்
ராட்சத கிணறு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை கண்டித்து கிராம மக்கள் லட்சுமிபுரத்தில் மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம்: தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் ஓபிஎஸ்ஸைக் கண்டித்து கிராம மக்கள் இன்று மனித சங்கிலிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பெயரில் தென்னந்தோப்பு உள்ளது. இங்கு மிகப் பெரிய ராட்சத கிணறுகள் 2 உள்ளன.
இதனால் ஊராட்சிக்கு குடிநீர் எடுக்கும் கிணற்றில் தண்ணீர் வற்றத் தொடங்கியது. ஊராட்சிக்கு குடிநீர் பற்றாக்குறை நிலவியது.
மக்கள் போராட்டம்
ஒபிஎஸ்ஸுக்கு சொந்தமான கிணற்றில் உள்ள தண்ணீரை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வலியுறுத்தி லட்சுமிபுரம் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே, சர்ச்சைக்குரிய கிணற்றை தானமாக வழங்குவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கிணற்றை ஒப்படைக்கவில்லை
ஆனால் அதற்கான எந்த முயற்சியும் செய்யப்படவில்லை. மேலும், கிணற்றை பொதுமக்களிடம் ஒப்படைக்க முடியாத நிலையில் ஓபிஎஸ் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர் போராட்டம்
இந்நிலையில், கடந்த 3 தினங்களாகக் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 6ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். 7ம் தேதியான நேற்று குத்து விளக்கேற்றி போராட்டம் நடத்தினர்.
கறுப்புக் கொடி போராட்டம்
இன்று காலை கிராமத்தில் உள்ள வீடுகள் தோறும் கறுப்புக் கொடி ஏற்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து லட்சுமிபுரத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
மக்களை அவமதிக்கும் ஓபிஎஸ்
முன்னாள் முதல்வரான ஓபிஎஸ், தனது சொந்த ஊர் மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு மதிப்பளிக்காமல் சென்னையிலேயே இருந்து கொண்டு மக்களை அவமதிப்பதாகக் கிராமத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். தங்கள் போராட்டத்திற்கு மதிப்பளித்து கிணற்றை பொது மக்களிடம் உடனடியாக ஓபிஎஸ் ஒப்படைக்க வேண்டும் என்று கிராமத்தினர் கோரி வருகின்றனர்.