அரசாங்கத்தை கைவிட்ட கருத்தக்குடி மக்கள்.. சொந்தமாக கிணறு தோண்டி அசத்தல்!
தங்களுக்கு தேவையான குடிநீரை தாங்களே ஊருக்கு நடுவில் அமைத்து கொண்டனர்.
Recommended Video
ராமநாதபுரம்: நம் எல்லா தேவைகளுக்கும் அரசையே நம்பிக் கொண்டிருந்தால் அவ்வளவுதான் என்று கிராம மக்களே ஒன்று கூடி குடிநீர் கிணறு ஏற்படுத்தி அசத்தியுள்ளனர்.
எங்கு தெரியுமா? ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணிக்கு அருகே உள்ள கருத்தக்குடியில்தான். 80 குடும்பங்கள் உள்ள கிராமம் அது. செழித்து வளர்ந்த பூமிதான். ஆனால் தற்போது மழை இல்லாததால், கடும் வறட்சியின் கோர முகங்கள் காய்ந்த மரங்களில், கருகும் செடிகொடிகளில், பாளம் பாளமாக வெடித்து காணப்படும் சாலைகளில் காண முடிகிறது.
இதுநாள் வரை கருத்தக்குடி மக்களின் குடிநீர் தேவையை கிணறு ஒன்று பூர்த்தி செய்துகொண்டிருந்தது. ஆனால் தற்போது அந்த கிணறு வற்றிப்போய் உள்ளது. சரி, கிணற்றை ஆழப்படுத்தலாம் என்று ஊர்மக்கள் முயற்சியை மேற்கொண்டனர். ஆனால் அதிலிருந்து கிடைத்தது என்னவோ உப்புத்தண்ணீர்தான். இதனால் குடிக்க நீரின்றி அவதிப்பட்டனர். தங்களுக்கு நீர் வேண்டும் என்று பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
ஆனால் வழக்கம்போல் ஏமாற்றம்தான். அரசின் கிடப்பிலுள்ள பல மனுக்களில் கருத்தக்குடியின் மனுவும் ஒன்றாகி கலந்துவிட்டது. இனி என்ன செய்வது? அரசை நம்பி பிரயோஜனம் இல்லை என்று ஊர்மக்கள் முடிவுக்கு வந்தனர். தாங்களே புதிதாக ஒரு கிணறு தோண்டலாம் என முயற்சி செய்தனர். அதற்காக தங்களுக்குள்ளேயே பணத்தையும் வசூல் செய்து கொண்டனர்.
அதை வைத்து தங்களது ஊருக்கு நடுவே போர்வெல் போட்டு கொண்டார்கள். இப்போது அதிலிருந்து வரும் சுவையான தண்ணீர்தான் கருகாத்தி மக்களின் தாகத்தை மனதையும் குளிர்வித்து வருகிறது. இதோடு மட்டும் அவர்கள் விட்டுவிடவில்லை, தற்போது வீட்டுக்கு ஒரு பைப் போட்டு குடிநீர் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த போகிறார்களாம்.
கோடைக்காலம் என்பதால் சிறுவர்கள், பெரியவர்களின் தேவைக்காக ஊர்குளத்தில் தண்ணீர் வேறு நீரை நிரப்பி கொண்டு இருக்கிறார்கள். தங்கள் ஊரின் தேவை போக மற்ற கிராமங்களுக்கும் குடிநீர் தரப்போகிறார்களாம். இதையெல்லாம் பார்க்கும்போது, 'பாசமலர்' படத்தில் வரும் ஒரு பாடல்தான் நினைவுக்கு வருகிறது "எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும், வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே!" என்று. ஒற்றுமை என்ற ஒன்றுமட்டும் இருந்தால் எல்லாமும் சாத்தியம்தான் என்பதை கருத்தக்குடி மக்கள் நிரூபித்துள்ளனர்.