மணல் குவாரிகளால் மலடாகும் காவிரி ஆறு... கரூரில் கொந்தளித்த 20 கிராம மக்கள்
கரூரில் காவிரி ஆறு பாதுகாக்கும் இயக்கம் சார்பாக பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது 20 கிராம மக்கள் பங்கேற்றனர்.
கரூர்: மணல் கொள்ளையை எதிர்த்து கரூரில் காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் 20 கிராம மக்கள் பங்கேற்று மணல் கொள்ளைக்கு எதிராக முழக்கமிட்டனர்.
கரூர் மாவட்டத்தில் தொட்டக்குறிச்சி, மாயனூரில் மட்டும் மணல் குவாரிக்கு அனுமதி உள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக காவிரி பாதுகாப்பு இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை செயலிழக்கும் இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஒற்றை தீர்ப்பாயத்தை ரத்து செய்ய வேண்டும். முகிலன், விசுவநாதன் உள்ளிட்ட இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
காவிரி ஆறு கடந்த 4 மாதங்களாக ஒருசொட்டு நீர்இன்றியும், டெல்டா பகுதியில் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து வரும் நிலையில் காவிரிஆற்றை பாதுகாக்கும் இந்த பேரணி நடத்தப்பட்டது.
20 கிராம மக்கள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட பேரணியில் காவிரி ஆற்றை மலடாக்கும் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று கிராம மக்கள் அனைவரும் முழக்கமிட்டனர்.