ஹைட்ரோ கார்பன்... தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பி வைக்க கிராம மக்கள் திட்டம்
நெடுவாசலில் வரும் 31-ந் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை: நெடுவாசலில் வரும் 31-ந் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.
நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. அந்த திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகத்தில் விவசாயம் கேள்விக்குறியாகி, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
விவசாயத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த அனுமதி்க்க முடியாது என்று தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை மக்கள் தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தம் நேற்று டெல்லியில் மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்தானது. பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்பட 22 நிறுவனங்களுக்கு இந்த ஒப்பந்தத்தை பெற்றுக் கொண்டன.
அதன்படி நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுக்க ஜெம் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 6 மாதங்களில் அந்த நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணியை துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்த்து தெரிவித்து தங்கள் போராட்டத்தை மீண்டும் முன்னெடுத்துச் செல்வது குறித்து 70 கிராம மக்களுடன் நெடுவாசல் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.
இதையொட்டி நெடுவாசலில் வரும் 31- ந் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. நிறைவேற்றப்படும் தீர்மானத்தை குடியரசுத் தலைவர், பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் தெரிகிறது.