இது தேவையா ராசாத்தி.... கைதியோடு 36 வயதினிலே படம் பார்த்து சஸ்பெண்ட் ஆன 3 போலீஸார்!
விழுப்புரம்: விழுப்புரத்தில் கைவிலங்கோடு விசாரணைக் கைதியை சினிமாவிற்கு அழைத்துச் சென்ற மூன்று போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளியன்று ஜோதிகா நடித்த 36 வயதினிலே படம் ரிலீசானது. திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்த ஜோதிகா, சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு நடிக்கும் படம் என்பதால், மக்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இந்நிலையில், விழுப்புரம் நகர காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ. அழகேசன், காவலர் ராமச்சந்திரன், தலைமைக் காவலர் ஞானப்பிரகாசம் ஆகிய மூன்று பேரும் சனிக்கிழமை அன்று இரவு இப்படத்தை தியேட்டரில் பார்க்கச் சென்றுள்ளனர். அப்போது தங்களுடன் விசாரணைக் கைதி ஒருவரையும் கையில் விலங்கிட்டபடி அழைத்து வந்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் மட்டும் சீருடையில் இருக்க மற்ற போலீசார் சாதாரண உடையில் இருந்துள்ளனர். கையில் விலங்கோடு கைதி படம் பார்க்க வந்திருப்பதைக் கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், தியேட்டரில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. முழு படத்தையும் கைதியுடன் அமர்ந்து அவர்கள் பார்த்துள்ளனர்.
விழுப்புரம் டவுன் போலீஸ் நிலையத்தை சேர்ந்த அப்போலீசார், இரவு ரோந்து பணிக்கு செல்லாமல் தியேட்டருக்கு சென்றுள்ளனர். கைதியுடன் அவர்கள் போலீஸ் நிலைய ஜீப்பில் அழைத்து வந்திருந்தனர்.
‘இரவு ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் இதுபோல் தியேட்டருக்கு வந்து சினிமா பார்ப்பது வாடிக்கையாக உள்ளது. அவர்கள் டிக்கெட் வாங்கமாட்டார்கள். அதுமட்டுமல்ல நொறுக்கு தீனி, காபி, டீ, குளிர்பானங்கள் அவர்களுக்கு நாங்கள் ஓசியில் வழங்க வேண்டும்' என தியேட்டர் ஊழியர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பான செய்தி ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
போலீசாருடன் அமர்ந்து சினிமா பார்த்த கைதி யார் என்ற விபரத்தை அவர்கள் வெளியிடவில்லை!