திருப்பூரைத் தொடர்ந்து விழுப்புரம் கோர்ட்டும் விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கிறது?
விழுப்புரம்: தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆஜராகவில்லை. ஆகையால் விழுப்புரம் நீதிமன்றம் விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படலாம் என தெரிகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மீது முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில் திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் 4 முறையும் விஜயகாந்தும் பிரேமலதாவும் ஆஜராகவில்லை.
திருப்பூர் கோர்ட் பிடிவாரண்ட்
இதனால் நீதிபதி அலமேலு இன்று விஜயகாந்த், பிரேமலதா இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதனிடையே விழுப்புரம் நீதிமன்றத்திலும் விஜயகாந்த், பிரேமலதாவுக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
அவதூறு வழக்கு
விழுப்புரம் மாவட்டம் எரஞ்சி பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த், பிரேமலதா, பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு இது. இந்த வழக்கிலும் விஜயகாந்த், பிரேமலதா இருவரும் நீதிமன்றத்தில் இன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
பிடிவாரண்ட்?
ஆனால் பார்த்தசாரதி, வெங்கடேசன் மட்டுமே ஆஜராகினர். விஜயகாந்த், பிரேமலதா இருவரும் ஆஜராகவில்லை. இதனால் திருப்பூர் நீதிமன்றம் பிறப்பித்ததைப் போல விஜயகாந்துக்கு எதிராக விழுப்புரம் நீதிமன்றமும் பிடிவாரண்ட் பிறப்பிக்கக் கூடும் என தெரிகிறது.
விருகம்பாக்கம் ஸ்டேஷனில்
இதனிடையே முன்னாள் அமைச்சர் ஆனந்தன் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் இன்று பிரேமலதா ஆஜராகி கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.