பசங்க முட்டி போட்டுதான் பாத்திருப்பீங்க!... எச்.எம்மே முட்டி போடுவதை பாத்தீருப்பீர்களா?
விழுப்புரம் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்கள் நல்லா படிக்க வேண்டும் என்று அவர்களிடம் மண்டியிட்டு தலைமை ஆசிரியர் வேண்டுகிறார்.
விழுப்புரம்: விழுப்புரம் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களிடம் மண்டியிட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கும் தலைமை ஆசிரியரின் செயல் அனைவரையும் வியக்க வைக்கிறது.
அந்த காலத்தில் கண்களை மட்டும் விட்டுவிட்டு தோலை உரிங்க என்று நம் பெற்றோர் ஆசிரியர்களிடம் கூறிவிட்டு செல்வதை கேட்டிருக்கிறோம். ஆனால் இன்றோ மாணவர்கள் மீது அடித்தால் போதும் போராட்டம், புரட்சி, மறியல் என வரிசை கட்டி வருகின்றன.
இதனால் எத்தனை குறும்பு செய்தாலும் ஆசிரியர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலைதான் உள்ளது. அத்தகைய மாணவர்களுக்கு மத்தியில் அன்புடன் அவர்களை திருத்தும் தலைமை ஆசிரியரின் செயல் தற்போது வைரலாகி வருகிறது.
விழுப்புரத்தில் காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக உள்ளவர் பாலு (56). இவர் மாணவர்களிடம் அன்பு செலுத்தியே அவர்களை நல்வழிப்படுத்தி வருகிறார். இந்த பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த இவர் பாடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவர் முறையாக பள்ளிக்கு வராததை அறிந்த பாலு, அவரிடம் பள்ளிக்கு ஏன் வரவில்லை என்று கேட்டார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் மாணவரிடம் மண்டியிட்டு பள்ளிக்கு வந்து ஒழுங்காக கல்வி கற்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
அப்போது யாரோ அவரை செல்போனில் படம் எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பியுள்ளனர். இதுகுறித்து பாலுவிடம் கேட்டதற்கு, பள்ளியில் சரியாக படிக்காத மாணவர்களுக்கு அறிவுரை சொல்வது வழக்கம். அதுபோல்தான் இந்த மாணவருக்கும் கூறினேன். இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என்றார்.
மாணவர்களை முட்டி போடவைப்பது, வெயிலில் நிற்க வைப்பது, காதை திருகுவது, மைதானத்தில் ஓட விடுவது, பாடத்தை 10 முறை எழுத கூறி இம்போஷீஷன் கொடுப்பது போன்ற வாத்தியார்களையும் அதை ஆமோதிக்கும் தலைமை ஆசிரியர்களையும் பார்த்துள்ள நமக்கு இப்படிப்பட்ட தலைமை ஆசிரியரின் செயல்பாடு மகிழ்ச்சியாகவே இருப்பதாகவும் இவரால் மாணவர்கள் நன்கு படிக்கிறார்கள் என்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.