கஷ்டப்பட்டு சேர்த்த காசு செல்லாம போச்சு... தெரியாமலே உயிரை விட்ட விழுப்புரம் மூதாட்டி!
விழுப்புரத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தன்னுடைய இறுதிச் சடங்கிற்காக சேர்த்து வைத்த பணம் செல்லாமல் போனது அவரது இறப்பிற்கு பிறகே தெரிய வந்தது.
விழுப்புரம் : ஈமச்சடங்கிற்காக மூதாட்டி ஒருவர் சேர்த்து வைத்திருந்த பணம் பழைய ரூ. 500 நோட்டுகளாக இருந்தது அவரது இறப்புக்கு பிறகு தெரியவந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தை அடுத்த பெரியமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி என்ற மூதாட்டி. இவர் நேற்று உயிழந்த நிலையில் அவரது உடைமைகளை குடும்பத்தார் எடுத்து பார்த்துள்ளனர்.
அதில் லட்சுமி சுமார் ரூ. 32 ஆயிரம் பணம் சேமித்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதில் துரதிஷ்டமான செய்தி என்னவென்றால் அந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் பழைய 500 ரூபாய் நோட்டுகள். லட்சுமி இந்தப் பணத்தை தனது இறுதிச் சடங்கிற்காக சேமித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தனது ஈமச்சடங்குக்காக மூதாட்டி சேமித்த வைத்த 32,000 ரூபாய்... அனைத்தும் பழைய ரூ.500, 1000 நோட்டுகள்... https://t.co/WU7X6dUygB pic.twitter.com/tE4YSDw9t4
— News18 Tamil Nadu (@News18TamilNadu) November 17, 2017
ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வந்து ஓராண்டு முடிந்த நிலையில் அதுபற்றி தெரியாமல் பணத்தை வைத்திருந்த மூதாட்டியின் மொத்த உழைப்பும் வீணாகிப் போயுள்ளது. தனது கடைசி காலம் வரை கூலி வேலை செய்து லட்சுமி இந்த பணத்தை சிறுக சிறுக சேமித்துள்ளார். ஆனால் அவர் கஷ்டப்பட்டு சேகரித்த பணம் எல்லாம் வீணாகிப் போயுள்ளது குடும்பத்தினரை வருத்தமடையச் செய்துள்ளது.