எஸ்விஎஸ் மருத்துவ மாணவிகள் மரணம்- தாளாளர் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு
சென்னை: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள கல்லூரி தாளாளரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எஸ்.வி.எஸ் நேச்சுரோபதி மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் மர்மமான முறையில் அப்பகுதியில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தனர்.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், கல்லூரி நிர்வாகிகள் உட்பட பலரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கல்லூரி தாளாளர் வாசுகி, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகியோர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இவர்களுக்கு ஜாமீன் வழங்க அரசுத் தரப்பும், மாணவிகள் தரப்பும் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தது. இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி, மனு மீதான தீர்ப்பை நாளை பிறப்பிப்பதாக உத்தரவிட்டுள்ளார்.