விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார்பட்டியில் தேரோட்டம்- பக்தர்கள் குவிந்தனர்
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் நடைபெற்ற சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்வான தோரோட்டத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
காரைக்குடி: பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குடவரைக் கோயிலான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா கடந்த புதன்கிழமை தொடங்கியது.
கற்பக விநாயகர் ஆலயம்
பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் கொண்டாடப்படுவது உலக பிரசித்திப் பெற்றதாகும். அதன்படி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கடந்த ஆகஸ்ட்16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
தேரோட்டம்
தற்போது தினசரி உற்சவமும், பிள்ளையார் திருவீதி உலாவும் நடைபெற்று வருகிறது. இன்று மிக முக்கிய நிகழ்வான விநாயகர், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் தொடங்கி குடவறை அமைந்துள்ள மலையை வலம் வந்தன. இதனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் முக்கிய அம்சமாக சண்டிகேஸ்வரர் தேரை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்தனர்.
சந்தனக்காப்பு அலங்காரம்
தேரோட்டத்தை முன்னிட்டு மூலவர் சந்தனக் காப்பு அலங்காரதரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்புரிவார். இந்த அலங்காரம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும்.
தீர்த்தவாரி
விநாயகர் சதுர்த்தி தினமான வெள்ளிக்கிழமை ஆகஸ்ட்25 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலையில் கோயில் திருக்குளத்தில் உற்சவர் எழுந்தருளுகிறார். குளத்தில் அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.
ராட்சத கொழுக்கட்டை
மதியம் உச்சிகால பூஜையில் மூலவருக்கு ராட்சத கொளுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அன்று இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.