நீதிமன்ற வளாகத்தில் விநாயகர் சிலை திருட்டு... அதிர்ச்சியில் திண்டுக்கல் போலீசார்
திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை திடீரென திருட்டுப்போயுள்ள விவகாரம் திண்டுக்கல் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒன்றரை அடி உயர விநாயகர் சிலை திருட்டுப் போயுள்ள சம்பவம் போலீசார் மற்றும் நீதிபதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற வளாகத்திலேயே திருட்டு நடந்துள்ளது திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த மாவட்ட நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய கட்டதிற்கு மாற்றப்பட்டது. இதனால் பழைய நீதிமன்றத்தில் இருந்த விநாயகர் சிலையை, புதிய நீதிமன்ற வளாகத்தில் பிரதிஷ்டை செய்து வழக்கறிஞர்கள் வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்த, அந்த ஒன்றரை அடி விநாயகர் சிலையை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிலை திருட்டில் ஈடுபட்டவர்களை வலைவீசித் தேடி வருகிறார்கள். நீதிமன்ற வளாகத்தில் விநாயகர் சிலை திருடுபோனது, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.