பிரச்சினை ஏதுமில்லாமல், அமைதியாக நடந்து முடிந்த முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஒன்றிய நகர இந்து முன்னணி சார்பில் 23 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக இது நடந்து முடிந்ததால் போலீஸாரும், பொதுமக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
முத்துப்பேட்டை, ஜாம்புவானோடை வடகாடு சிவன் கோவிலிருந்து ஊர்வலம் மதியம் 2 மணிக்கு புறப்பட்டது. ஊர்வலத்தில் உப்பூர், தில்லைவிளாகம், ஆலங்காடு உட்பட 19 பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டது.
பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பேட்டை சிவா, மாவட்ட செயலாளர் மாரிமுத்து, கோட்ட இளைஞர் அணி செயலாளர் பொறுப்பாளர் ராமலிங்கம், மாவட்ட முன்னாள் செயலாளர் குமரவேல் ஆகியோரது தலைமையில் ஊர்வலம் சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரான் சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கோரை ஆற்றுபாலம் பகுதி வழியாக முத்துப்பேட்டை ஆசாத் நகர் சென்றது. அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேருந்து நிலையம், நியூ பஜார், கொய்யா முக்கம், பங்களா வாசல், ஓடக்கரை, ரயில்வே கேட் வழியாக செம்படவன் காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் இரவு 7.30 மணிக்கு கரைக்கப்பட்டது.
ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக ஊர்வல பாதை முழுவதும் ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. ஊர்வலத்தை 100க்கும் மேற்பட்ட வீடியோக் கேமராக்கள் எடுக்கப்பட்டது. ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு வேலிகள், ஆயிரக்கணக்கான தடுப்புகள் அமைத்து கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.
ஊர்வலத்தில் திருச்சி சரக ஐ.ஜி.ராமசுப்பிரமணியன் மேற்பார்வையில் தஞ்சை சரக டி.ஐ.ஜி(பொறுப்பு) பெரியய்யா, திருவாரூர் எஸ்.பி.ஜெயசந்திரன்;, தஞ்சை எஸ்.பி.தர்மராஜ், நாகை எஸ்.பி.அபிநவ் குமார், கரூர் எஸ்.பி. ஜோசி நிர்மல் குமார், அரியலூர் எஸ்.பி.ஜியாவுல் ஹக் ஆகியேரது தலைமையில் திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அதிரடி படை, பட்டாளியன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.
மேலும் முத்துப்பேட்டை சுற்று புறப்பகுதியில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் தீவர சோதனையில் ஈடுப்பட்டனர். மிகவும் பரபரப்பாகவும், பதற்றத்துடன் துவங்கிய ஊர்வலம் சரியான நேரத்தில் துவங்கி சரியான நேரத்தில் அமைதியாக முடிந்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.