காயல்பட்டணத்தில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகேயுள்ள காயல்பட்டணத்தில் போலீசாரின் பலத்த பாதுகாப்பிற்கிடையே விநாயகர் சிலைகள் ஊர்வலம் அமைதியாகக் நடந்து முடிந்தது.
இந்துக்களின் முதல் கடவுளான விநாயகப்பெருமானின் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி நாளில் கோவில்களில் வழிபாட்டுக்கு வைக்கப்படும் விநாயகர் சிலைகள் வழிபாடுகளுக்கு பின்னர் அருகிலுள்ள கடல், ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கமாகும்.
இதன்படி இந்தாண்டிற்கான விநாயக சதுர்த்தி விழா கடந்த 9ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவினை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏராளமான விநாயகர் சிலைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகள் தற்போது நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது.
இதன்படி தூத்துக்குடி அருகேயுள்ள காயல்பட்டிணம், ஆறுமுகநேரி, அடைக்கலாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் திருச்செந்தூர் கடலில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
விநாயகர் ஊர்வலத்தில் ஆறுமுகநேரி பகுதியில் இருந்து 48 விநாயகர் சிலைகளும், கயத்தாறு பகுதியில் இருந்து ஐந்து விநாயகர் சிலைகளும், நாசரேத், நல்லான்விளை, இடையன்விளை குரும்பூர், நாலுமாவடி, மூலக்கரை, ராணிமகராஜபுரம், ஆத்தூர், மேலஆத்தூர், தலைவன்வடலி, கீரனூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 81 விநாயகர் சிலைகளும் என 134சிலைகள் ஊர்வலத்தில் எடுத்து செல்லப்பட்டது.
இதுபோக ஊர்வலம் செல்லும் வழியான பேயன்விளை புதூர், அழகாபுரி, லட்சுமிபுரம், இரத்தினபுரி, காயல்பட்டணம் சிவன்கோவில் தெரு, விசாலட்சுமி கோவில் தெரு, மன்னராஜா கோவில் தெரு, பூந்தோட்டம் மற்றும் ஓடக்கரை பகுதியில் இருந்த விநாயகர் சிலைகளும் ஊர்வலத்துடன் எடுத்துசெல்லப்பட்டது.
காயல்பட்டணத்தில் இருந்து வீரபாண்டியபட்டணம் வழியாக திருச்செந்தூர் கடலுக்கு கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் முடிவில் கடலில் கரைக்கப்பட்டன. மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் காயல்பட்டணத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் விசாலாட்சியம்மன் கோயில் தெரு, பூந்தோட்டம், ஓடக்கரை வழியாக திருச்செந்தூர் சென்றது.
விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு, ஆறுமுகனேரி, காயல்பட்டணம் பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. துணை கண்காணிப்பாளர்கள் ஞானசேகரன்(திருச்செந்தூர்), கந்தசாமி(மாவட்ட குற்றவியல் ஆவண காப்பகம்), பிரான்சிஸ் சேவியர் பெஸ்கி (தூத்துக்குடி நகரம்), ஆறுமுகனேரி இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு பணி மேற்கொண்டனர்.
போலீசாருடன், ஊர்க்காவல்படையினரும் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலவர தடுப்பு வாகனம், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. முஸ்லிம்கள் நிறைந்த காயல்பட்டணம் பகுதி வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மதநல்லிணக்கத்தினை எடுத்துக்காட்டும் வகையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக வந்தபோது இந்துக்களுக்கு சில முஸ்லிம் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தும் மகிழ்ந்தனர்.