கலவரத்தால் பெங்களூரின் பெயர் கெட்டு விட்டது.. ஒன்இந்தியா தமிழ் வாசகர்கள் கருத்து #bengaluru
சென்னை: காவிரிப் பிரச்சினை தொடர்பாக பெங்களூரில் நடந்த மிகப் பெரிய கலவரம் மற்றும் வன்முறை காரணமாக தலைநகரின் பெயர் கெட்டுப் போய் விட்டதாக ஒன்இந்தியா தமிழ் வாசகர்கள் உரத்த குரலில் கூறியுள்ளனர்.
பெங்களூரை ரசிக்காதவர்கள் இல்லை, காதலிக்காதவர்கள் இல்லை.. ஆனால் அப்படிப்பட்ட அழகிய பெங்களூரைப் பார்த்து இன்று பலரும் பயப்படும் நிலை ஏற்பட்டு விட்டது. இதற்குக் காரணம் சில வன்முறையாளர்களின் வரம்பு மீறிய செயலே.
இந்த கண்மூடித்தனமான வன்முறை மற்றும் கலவரம் காரணமாக பெங்களூருக்கு இருந்த நற் பெயர் கெட்டு விட்டதாக ஒன்இந்தியா தமிழ் வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 55 சதவீதம் பேர் இவ்வாறு உரத்த குரலில் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் வன்முறை
காவிரிப் பிரச்சினை தொடர்பாக பெங்களூரில் ஒரு இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்த, ராமேஸ்வரத்தில் சிலர் தேவையில்லாமல் கர்நாடக வேன் டிரைவரைப் பிடித்து அடித்து வெறித்தனத்தைக் காட்டினர். இதனால் பெங்களூரில் வன்முறை வெடித்தது. வெறியாட்டம் போட்டு விட்டனர் கன்னட அமைப்பினர்.
நூற்றுக்கணக்கில் வாகனங்கள் எரிப்பு
கேபிஎன் பஸ்கள் கூண்டோடு தீவைத்து எரிக்கப்பட்டன. இதே போல லாரிகள், கார்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. பல இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த வாகன டிரைவர்களும் தாக்கப்பட்டனர். மொத்தத்தில் பெங்களூர் வன்முறை களமாகிப் போனது.
பெங்களூரு பெயர் கெட்டது
இந்தக் கலவரத்தால் பெங்களூரு நகரின் பெருமையும், பெயரும் கெட்டுப் போய் விட்டதாக ஒரு கருத்து எழுந்துள்ளது. இதை முன்வைத்து நமது வாசகர்களிடம் கருத்து கேட்டிருந்தோம். அவர்களது பெரும்பான்மையான கருத்தும் அதுவாகவே உள்ளது. 55 சதவீதம் பேர் பெங்களூரின் பெயர் கெட்டு விட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இல்லை 3 சதவீதம்
பெங்களூரின் பெயர் இந்த கலவரத்தால் கெடவில்லை என்று மிக மிக சொற்பமானவர்களே கூறியுள்ளனர். அதாவது 3 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
அவப் பெயராகி விட்டது
பெங்களூருக்கு இந்தக் கலவரம் அவப் பெயரை, அவமானத்தைத் தேடிக் கொடுத்து விட்டதாக 831 பேர் அதாவது 5 சதவீதம் பேர் கருத்து தெரிவி்த்துள்ளனர்.
பெங்களூரு சமாளிக்கும்
இந்தக் கலவரத்தால் ஏற்பட்ட அவமானத்தை, கெட்ட பெயரை துடைத்து சமாளித்து மீண்டு எழும் பெங்களூரு என்ற கருத்தை 6 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
அப்பாவி மக்களின் பெயர்தான் கெட்டது
இந்தக் கலவரத்தால் அப்பாவி கன்னட மக்களின் பெயர்தான் தேவையில்லாமல் கெட்டு விட்டதாக 14 சதவீதம் பேர் கூறஇயுள்ளனர். அதாவது 2206 வாக்குகள் அதற்குக் கிடைத்துள்ளது.
ஐடி நிறுவனங்கள் இடம் பெயரலாம்
இந்தக் கலவரம் காரணமாக பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அங்கிருந்து இடம் பெயரும் என்ற எண்ணமும் பலரிடமும் வலுத்து வருகிறது. அதாவது 2469 வாக்குகள், 16 சதவீத வாக்குகள் அதற்குக் கிடைத்துள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்புக்கு மொத்தம் 15380 வாக்குகள் கிடைத்துள்ளன. அதில் பெரும்பாலானவர்களின் தீர்ப்பு பெங்களூரின் பெயர் கெட்டு விட்டது என்பதே. இது "பெங்களூர் காதலர்களுக்கு" நிச்சயம் வருத்தமான செய்திதான்.