ஏங்க மக்கள் மனசு அவ்ளோ மரத்துப் போச்சா... இல்ல மரத்துப் போக வச்சிட்டாங்களா?
சென்னை: செய்தித்தாள், பேஸ்புக், டிவி என எதைப் பார்த்தாலும், முன்னதாக ஒரு நிமிடம் மூச்சை இழுத்து விட்டு, எதற்கும் தயாராகிக் கொண்டு தான் பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தளவிற்கு எல்லாவற்றிலும் ரத்தம், ரத்தம், ரத்தம்.
முன்பெல்லாம் இளகிய மனம் படைத்தவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் தயவு செய்து இதைப் பார்க்க வேண்டாம் என்ற எச்சரிக்கை வாசகம் சொல்லப்படுவதுண்டு. தற்போது அதையெல்லாம் மருந்துக்கும்கூட பார்க்க முடிவதில்லை.
இதேபோல், ஊடகங்களுக்கென்று சில தர்மங்கள் உண்டு. அதாவது பார்ப்பவர்கள் மனதை இம்சிக்கக்கூடிய புகைப்படங்களையோ, வீடியோக்களையோ பிரசுரிக்கக் கூடாது என. ஆனால், அதுவும் இப்போது காற்றில் பறந்து விட்டது.
கார் விபத்து...
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சொகுசு கார் ஏற்படுத்திய விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக் உயிரிழந்தார். மெட்ரோ ரயில் பாதைக்காக வைக்கப்பட்டிருந்த கம்பிகளில் சிக்கி பரிதாபமாக அவர் பலியாகியிருந்தார். பிரபல செய்தித்தாள் அதனை அப்படியே புகைப்படமாக வெளியிட்டு பார்ப்பவர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
சிசிடிவி வீடியோ...
இதேபோல், மற்றொரு சம்பவம். நேற்று கட்டுப்பாடின்றி ஓடிய கார் ஒன்று மோதி இரண்டு பேர் பலியானார்கள். கண்காணிப்புக் கேமராவில் பதிவான அந்த வீடியோ திரும்பத் திரும்ப சில ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது.
சினிமா விளம்பரங்கள்...
உண்மைச் சம்பவங்கள் என்றில்லை, சினிமா விளம்பரங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தற்போது தமிழ் சினிமாவிற்கு பேய்ப் பிடித்துள்ளது என்பதால், அடிக்கடி சேனல்களிலும் பேய்ப்படங்கள் ஒளிபரப்பப் படுகின்றன.
பேய்ப்பட விளம்பரம்...
நல்ல நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென பேய்ப்பட விளம்பரம் ஒளிபரப்பாகி பார்ப்பவர்களை மிரள வைக்கிறார்கள். முன்பெல்லாம் உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என்ற வாசகத்திற்குப் பின் தான் இத்தகைய விளம்பரங்கள் வரும்.
ஷாக் தரும் விளம்பரங்கள்...
இதனால் முன்னெச்சரிக்கையாக நாம் கவனத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ளலாம். ஆனால் தற்போது அப்படியில்லை திடீர் திடீர் என பேய்ப்பட விளம்பரங்கள் தோன்றி திகில் கிளப்புகின்றன.
வாடா...
இத்தகைய விளம்பரங்களுக்கு முன்னோடி நம்ம விஜய் படம் வேட்டைக்காரன் என்றே சொல்லலாம். அதன் விளம்பரத்தில் தான் திடீரென வில்லன் தோன்றி, ‘வாடா' என ஆக்ரோஷமாக அழைப்பார். தற்போது அதே டிரண்ட் வாடிக்கையாகி விட்டது.
தவிர்க்க முடியாத கேள்வி...
அதிலும் குறிப்பாக தற்போது தொலைக்காட்சிகளின் முக்கிய பார்வையாளர்களாக குழந்தைகள் உள்ளனர். இத்தகைய மரத்துப் போன சமுதாயத்தை உருவாக்குவதாலோ என்னவோ அவர்களும் எதிர்த்துப் போராடும் குணம் அற்று, வன்முறைகளில் ஈடுபடுபவர்களாக உருவாகிறார்களோ என்ற சந்தேகம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.