அடுத்தடுத்து பலியாகும் விஜிபி கார் டிரைவர்கள்! பீதியை போக்க நடவடிக்கை எடுக்குமா போலீஸ்?
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மாஜி டிரைவர் கனகராஜ், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவின் கார் டிரைவர் ஆகியோர் அடுத்தடுத்து பலியாகிய நிலையில், ஜெயா டிவி கார் டிரைவர் சரவணன் பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகத் தேடப்பட்டவர் ஜெயலலிதாவிற்கு கார் ஓட்டிக் கொண்டிருந்த டிரைவர் கனகராஜ். ஜெயலலிதா இறப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்னர் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை ஏப்ரல் 24ம் தேதி நடைபெற்றது. இதில் முக்கிய குற்றவாளியாக ஜெயலலிதாவின் மாஜி கார் டிரைவர் கனகராஜ் தேடப்பட்டு வந்தார்.
என்கவுண்டர் வதந்தி
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், நள்ளிரவு நேரத்தில், சேலம் ஆத்தூர் பகுதியில் கனகராஜ் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. ஆனால், இதனை மறுத்த போலீசார் சாலை விபத்தில் கனகராஜ் மரணம் அடைந்தார் என்று கூறியது.
மர்மம்
சேலம் ஆத்தூரில் சாலை விபத்து நடந்ததற்கான எந்த ஒரு தடயமும் இல்லை. எந்த வாகனத்துடன் மோதி விபத்து நடந்தது என்ற விவரங்களையும் போலீசார் வெளியிடவில்லை. இதனால் இவரது மரணத்தில் மர்மம் அதிகரித்துள்ளது.
ராமமோகன ராவ் டிரைவர்
இதே போன்று, இன்று ஜெயலலிதாவால் தலைமைச் செயலாளர் பதவி வழங்கப்பட்ட ராமமோகன் ராவின் கார் ஓட்டுநர் பலியாகினார். ஓட்டுநர் ரவிசந்திரன், தாம்பரம் அருகில் நடைபெற்ற விபத்தில் பலியாகினார்.
அதிர்ச்சி
ஜெயலலிதாவின் மாஜி கார் ஓட்டுநர் கனகராஜ், முன்னாள் ராமமோகன் ராவ் கார் ஓட்டுநர் என வரிசையாக முக்கியமானவர்களின் கார் டிரைவர்கள் திடீர் திடீரென மர்ம மரணம் அடைந்து வந்ததது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், விஐபிக்கள், அமைச்சர்கள், முக்கிய செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளிடம் கார் ஓட்டும் டிரைவர்கள் பீதி அடைந்தனர்.
ஜெயா டிவி
இந்த நிலையில் தற்போது ஜெயா டிவி கார் டிரைவர் சரவணன், சென்னையில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. முந்தைய சம்பவங்கள் விபத்து மூலம் நடந்த நிலையில், சரவணன் சாவு மர்மான முறையில் உள்ளது. போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.