வாஸ்தவம்தான்.. ஊர்ல தண்ணி இல்லே.. இதை ஒத்துக்கவே 5 வருஷம் ஆச்சுங்க... வைரலாகும் தண்ணீர் கண்ணீர்!
தண்ணீர் பஞ்சம் குறித்த ஒரு வீடியோ வைரலாகி வருகிறது
Recommended Video
சென்னை: நம்ம அரசு நமக்காக எல்லாத்தையும் செய்யும் என்று நம்பி எத்தனையோ தூர கிராமத்து மக்கள் இன்னமும் காத்துக்கிட்டு இருக்கிறார்கள். ஆனால் அரசோ தன் மெத்தன போக்கில் இருந்து கொஞ்சமும் மாறவில்லை என்பதை திரைப்பட காட்சி ஒன்றின் மூலம் பொதுமக்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
இது ஒன்றும் புதிய காட்சி அல்ல.. பல காலத்திற்கு முன்பே மக்களுக்கு அதிகார இயந்திரத்தின் நிதானத்தையும், மெத்தனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் கே.பாலச்சந்தர்.. "தண்ணீர் தண்ணீர்" பட காட்சிதான் அது.
என்ன ஆச்சரியம் பாருங்கள். அந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் இன்று வரை நிஜமாகவே உள்ளது. இப்போது தண்ணீர்ப் பிரச்சினையை சந்தித்து வரும் ஒவ்வொருவரும் அந்தக் காட்சியை வைரலாக்கி வருகிறார்கள்.
பத்திரிகைகாரர்
அந்த காட்சி இதுதான்: ஊருக்குள் 2 பேர் பேசிக் கொண்டு நடக்கிறார்கள். ஒருவர் பத்திரிகைகாரர். இன்னொருவர் உள்ளூர்வாசி. கிராமத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை நேரில் கண்ட வெளியூர் பத்திரிகைகாரர் உள்ளூர் நபரிடம் கேட்கிறார்.
கலெக்டர்
"இந்த ஊர்ல இவ்ளோ பஞ்சம்னா, நீங்க அரசாங்கத்துக்கு எழுதி போட வேண்டியதுதானே" என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அந்த ஊர் பெரியவர்,"போடாம என்ன.. கோவில்பட்டிக்கு போய் மந்திரியை நேராவே பார்த்து மகசர் கொடுத்தோம். அவர் அதை வாங்கி பிஏ..கிட்ட குடுத்தாரு. பிஏ அதை வாங்கி கலெக்டர்கிட்ட குடுத்தாரு.
தண்ணி இல்லை
கலெக்டர் அதை பிளாக்டெவலப்மென்ட் ஆபீசருக்கு அனுப்பினாங்க. பிளாக் டெவலப்மென்ட் ஆபீசர் அதை கிராமசேவக்குக்கு அனுப்பினார். கிராமசேவக், இந்த ஊருக்கு வந்து பார்த்துட்டு, "வாஸ்தவம்.. அந்த ஊர்ல தண்ணி இல்லேன்னு" பிளாக் டெவலப்மென்ட் ஆபீசருக்கு எழுதி போட்டாங்க.
மந்திரி
பிளாக் டெவலப்மென்ட் ஆபீசரும், "வாஸ்தவம்.. அந்த ஊர்ல தண்ணி இல்லேன்னு" கலெக்டருக்கு எழுதி போட்டாங்க. கலெக்டரும் "வாஸ்தவம்.. அந்த ஊர்ல தண்ணி இல்லேன்னு" பிஏக்கு எழுதி போட்டாங்க. பிஏவும், "வாஸ்தவம்.. அந்த ஊர்ல தண்ணி இல்லேன்னு" மந்திரிக்கு நோட்டு எழுதி வெச்சாங்க. மந்திரியும், "வாஸ்தவம்.. அந்த ஊர்ல தண்ணி இல்லேன்னு" சட்டசபையில ஒத்துக்கிட்டாக. இந்த உண்மையை கண்டுபிடிக்க அவங்களுக்கு 5 வருஷம் ஆச்சு" என்கிறார்.
உண்மைதான்
எத்தனை சத்தியமான வார்த்தை பாருங்க.. இந்தக் காட்சி மட்டுமல்ல.. தண்ணீர் தண்ணீர் படத்தில் வரும் அத்தனை காட்சிகளும் தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது வேதனையான உண்மைதான்.