டிஎன்பிஎல் கிரிக்கெட்... சேவாக், சிம்பு அறிமுகம் செய்த மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் !
சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், நடிகர் சிம்பு ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போன்று, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் முதன்முறையாக தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு, தேசிய அளவிலான டி 20 போட்டிகளில் விளையாட வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவும், கிராமங்களில் உள்ள வீரர்களுக்கு டி 20 அளவிலான போட்டிகளில் விளையாட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் இப் போட்டி நடத்தப்படுகிறது.
இதில், மதுரை, தூத்துக்குடி, தென் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், காரைக்குடி, திண்டுக்கல், கோவை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. 8 அணிகளும் ரவுண்ட்ராபின் முறையில் விளையாடும். இப் போட்டிகள் சென்னை, திண்டுக்கல் (என்பிஆர் கல்லூரி நத்தம்) மற்றும் திருநெல்வேலி (இந்தியா சிமென்ட், சங்கர் நகர்) கிரிக்கெட் மைதானங்களில் நடைபெற உள்ளன. அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் சென்னையில் நடைபெறும்.
இந்த தொடரில் பங்கேற்கும் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் அறிமுக விழா சென்னையில் இன்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், நடிகர் சிம்பு, இசையமைப்பாளர்கள் அனிருத், தமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் மதுரை அணியின் அதிகாரப்பூர்வ லோகோ, சீருடை, அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மதுரை அணியின் உரிமையாளர் தயாநிதி அழகிரி, நிர்வாகிகள் மற்றும் சினிமா, விளையாட்டுத் துறை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய சேவாக், இளைஞர்கள் மற்றும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு வாழ்த்துக்கள். இந்த போட்டிகளின் மூலம் கிராமப்புற விளையாட்டு வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வரமுடியம் எனத் தெரிவித்தார்.