வெட்டு... குத்து... சண்டை- அதிகரிக்கும் குற்றங்களால் அதிக வேலை; மன உளைச்சலில் விருதுநகர் போலீஸ்!
விருதுநகர்: விருதுநகரில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களிலும் போதிய போலீசார் இல்லாததால் இருக்கும் போலீசாரையே ஓய்வின்றி தொடர்ந்து வேலைவாங்கும் போக்கு நிலவுகிறது.
இதனால் அம்மாவட்ட போலீசார் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் குற்றசெயல்கள் அதிகரித்தபடி உள்ளன.
குடுமிப்பிடி சண்டைகள் அதிகம்:
ஒவ்வொரு பகுதியிலும் திருவிழாவில் பிரச்னையும், கோஷ்டி மோதலும் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இது தவிர மாவட்டத்தின் பலபகுதிகளில் மாணவர்களிடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களிடையே ஜாதி மோதல் ஏற்படுகிறது.
குவிக்கப்படும் உள்ளூர் போலீசார்:
ஒவ்வொரு கலவரத்திற்கும், பதட்டமான சூழ்நிலையின் போதும் ஆயுதப்படை போலீசாருடன் ஸ்டேஷன்களில் பணிபுரியும் உள்ளூர் போலீசாரும் வரவழைக்கப்பட்டு பிரச்னை பகுதியில் குவிக்கப்படுகின்றனர். ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷன்களில் போதிய எண்ணிக்கையில் போலீசார் கிடையாது.
குறைவான எண்ணிக்கை போலீசார்:
இருக்கும் குறைந்த எண்ணிக்கை போலீசாரையும் கலவரங்கள், அரசியல் கட்சியினரின் மாநாடு, போராட்டங்களுக்கு அனுப்பி விடுவதால் மாவட்டத்தில் பெரும்பாலான போலீஸ் ஸ்டேஷன்கள் போலீசார் இன்றி உள்ளன. வழக்கமான பணி, சட்ட ஒழுங்கு பிரச்னைகளை கவனிப்பதற்கும் ஆட்கள் இருப்பதில்லை.
தொடர்ச்சியான பணிகள்:
இருக்கும் ஒருசில போலீசாரையே ஓய்வு எடுக்க விடாதபடி அடுத்தடுத்து தொடர்ந்து பணிகள் வழங்கப்படுகிறது. இது அவர்களிடையே பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
காலியாக இருக்கும் இடங்கள்:
விருதுநகர் மாவட்டத்தில் தற்போது ஒவ்வொரு சப்டிவிஷனிலும் 2 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அருகில் உள்ள ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரால் கூடுதல் பொறுப்பாக கவனிக்கப்படுகிறது. இதனால் அலுவலகப்பணிகளில் கூட பெரும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.
விடுமுறையே கிடையாது:
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "உள்ளூரில் பணிபுரியும் போலீசார்கூட 2 நாட்களுக்கு ஒருமுறைதான் வீட்டிற்கு செல்லும் நிலை உள்ளது. இரவுப்பணி பார்த்து விட்டு வீடு திரும்பக் கூட விடாமல் அடுத்தநாள் பகல் டூட்டி போட்டுவிடுகின்றனர். குடும்பத்தோடு ஒருநாள்கூட நிம்மதியாக இருக்க முடிவதில்லை.
மருட்டும் மன உளைச்சல்:
பெயருக்கு ஓய்வு கொடுத்து அனுப்பிவிட்டு ஒருமணி நேரத்தில் போன் செய்து டூட்டிக்கு அழைக்கின்றனர். விடுப்பு கேட்டாலும் கொடுக்க மறுக்கின்றனர். மருத்துவ விடுப்பு வேண்டுமென்றால் கூட எஸ்.பியிடம் அனுமதி பெறவேண்டும் என சாக்குப்போக்கு சொல்கின்றனர். மிகுந்த மனஉளைச்சலில் உள்ளோம். எங்களுக்கு பணிச்சுமை குறைய கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும்" என்று ஆற்றாமையுடன் தெரிவிக்கின்றனர்.