பெண் எஸ்பியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஐஜி.. விசாரணையை தொடங்குகிறது விசாகா கமிட்டி!
காவல்துறை ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி பாலியல் புகார் தெரிவித்தது குறித்து விசாரிக்க காவல்துறையின் விசாகா கமிட்டியின் முதல் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
சென்னை: காவல்துறை ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி பாலியல் புகார் தெரிவித்தது குறித்து விசாரிக்க காவல்துறையின் விசாகா கமிட்டியின் முதல் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
தமிழக காவல் துறையில், காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, தனது துறையைச் சேர்ந்த ஐ.ஜி மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இது தமிழக காவல்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக தமிழக டிஜிபி மற்றும் தலைமை செயலாளருக்கு அந்த பெண் எஸ்பி புகார் கடிதத்தையும் அனுப்பினார். அதில் தான் பணியில் சேர்ந்தது முதலே ஐ.ஜி தன்னிடம் தவறான நோக்கத்திலேயே நடந்து வருவதாக தெரிவித்திருந்தார்.
மிரட்டி கட்டிப்பிடித்தார்
சில சமயங்களில் ஆலோசனை என அழைத்து அவருடைய அறையில் வைத்து தன்னை கட்டிப்பிடித்து தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் அந்த பெண் எஸ்பி தனது புகாரில் தெரிவித்திருந்தார். பலமுறை தவிர்த்தும் தன்னை மிரட்டி தனக்கு ஐஜி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக அவர் கூறியிருந்தார்.
கட்டிப்பிடித்து முத்தம்
வேலை நேரத்தில் தனக்கு ஆபாசமான எஸ்.எம்.எஸ்கள் அனுப்புவது, ஆபாச படங்கள் அனுப்புவது என ஐஜியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பெண் எஸ்பி தெரிவித்துள்ளார். கடந்த ஒன்றாம் தேதி அவருடைய அறையில் ஐஜி தன்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார் பெண் எஸ்பி.
நாசமாக்கிவிடுவேன்
இது குறித்து வெளியில் கூறினாலோ அல்லது புகார் அளித்தாலோ ஆண்டுதோறும் வழங்கப்படும் நன்னடத்தை அறிக்கையில் மோசமான வார்த்தைகளை சேர்த்து எதிர்காலத்தை நாசமாக்கிவிடுவேன் என அந்த அதிகாரி மிரட்டியதாகவும் பெண் எஸ்.பி தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
விசாரணை குழு
இந்த புகார் கடிதம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து காவல்துறையில் பெண்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக, கூடுதல் டி.ஜி.பி சீமா அகர்வால் தலைமையில் குழு அமைத்து, தமிழக காவல் துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
விசாகா கமிட்டி
இந்தக் குழுவில் கூடுதல் டி.ஜி.பி சு.அருணாசலம், டி.ஐ.ஜி தேன்மொழி, டி.ஜி.பி அலுவலகத்தில் நிர்வாக பிரிவில் பணியாற்றும் ரமேஷ், ஓய்வு பெற்ற எஸ்.பி சரஸ்வதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்தக் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் உள்ள மாநில குற்ற ஆவணக் காப்பக அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பெண் எஸ்.பி-ன் புகார் குறித்து விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.