அரசியலில் குதித்தார் விஷால்... ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.சுயேட்சை வேட்பாளராக விஷால் களமிறங்குகிறார். இதன் மூலம் விஷால் அதிகாரப்பூர்வமாக அரசியலில் குதித்துவிட்டார்.
ஜெ. மறைவால் காலியான ஆர்.கே.நகரில் வரும் 21ம் தேதி, இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் அதிமுக சார்பில் மதுசூதனன் களமிறங்குகிறார். திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார்.
இதுதவிர சுயேட்சையாக தினகரன் போட்டியிட உள்ளார். நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் கலைக்கோட்டுதயம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
திங்கள்கிழமை வேட்புமனு
இதனிடையே, திடீர் வரவாக தென் இந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளரான விஷால் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். வரும் திங்கள்கிழமை அவர் மனு தாக்கல் செய்ய உள்ளார்.
மக்களுக்கு என்ன செய்தார்
அரசியலில் குதித்துள்ள, விஷால் இதுவரை தமிழக மக்களுக்காக என்ன செய்தார் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகளை சந்தித்து பேசியது மட்டுமே அரசியலில் குதிக்க தகுதியுடையதாகிவிடுமா என்று கேட்கிறார்கள் மக்கள்.
அரசியல், சினிமா அஸ்தமனம்
விஷாலுக்கு அரசியல் வாழ்வு மட்டுமல்ல, திரைப்பட வாழ்வும் அஸ்தமிக்கப்போகிறது என்று கூறியுள்ளார், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. எம்ஜிஆர், ஜெயலலிதா போல திரையுலகில் இருந்து வந்து அரசியலில் ஜெயிக்க முடியாது என்று அமைச்சர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்பே சொன்ன ஒன்இந்தியாதமிழ்
சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் விஷாலின் பின்புலத்தில் யார் உள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டும் என்றும், யாரை வீழ்த்த விஷால் போட்டியிட களமிறங்கியுள்ளார் என்றும் இயக்குநர் அமீர் கேள்விகளை எழுப்பியுள்ளார். விஷால் போட்டியிட உள்ளதாக கடந்த சில நாட்களாக 'ஒன்இந்தியாதமிழ்' செய்தி வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.