நடிகர் சங்கத்திலிருந்து ராதாரவியை நீக்க அனைவரும் விரும்பினார்கள்.. ஹைகோர்ட்டில் விஷால் விளக்கம்
நடிகர் சங்கத்திலிருந்து ராதாரவியை நீக்கியது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு என நீதிமன்றத்தில் ஆஜரான விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜரான விஷால், ராதாரவி நீக்கம் நடிகர் சங்க உறுப்பினர்களால் ஒரு மனதாக எடுக்கப்பட்டது என்றும் இதில் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்று விளக்கமளித்தார்.
நடிகர் சங்கத்தின் முன்னாள் சங்க உறுப்பினர் ராதாரவி, சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் தன்னை பதவியிலிருந்து நீக்குவதற்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஆஜரான நடிகர் விஷால், வழக்கு விசாரணை முடியும் வரை ராதாரவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என உறுதியளித்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்க பதவியிலிருந்து ராதாரவி அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் விஷால் மீது நடிகர் ராதாரவி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நேரில் ஆஜராகி விஷால் விளக்கமளித்தார்.
நடிகர் சங்க பொதுக்குழுவில் அனைவரும் ஒரு மனதாக ராதாரவியை நீக்க முடிவெடுத்ததாகவும் அதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றத்தை மீறும் எண்ணமில்லை என்றும் நீதிபதிகளிடம் அவர் விளக்கமளித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுந்தரேஷ் இந்த வழக்கை வரும் ஜனவரி 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் விஷால் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணைகளில் அவர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களித்து உத்தரவிட்டார்.