நேத்து வந்த விஷால் கூட ஆரம்பிச்சாச்சு... நீங்க எப்ப தலைவா.. ஏங்கும் ரஜினி ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: நடிகர் விஷாலும் கட்சியை தொடங்கிவிட்ட நிலையில் ரஜினிகாந்த் எப்போது கட்சியை தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
நடிகர் ரஜினியை அரசியல் களத்திற்குள் இழுத்து விட்டு 20 வருடங்கள் ஓடி விட்டன. ரஜினியே நான் வரப் போறேன் என்று அறிவித்து இதோ 8 மாதங்கள் உருண்டோடிவிட்டன. வெற்றிகரமான முதலாமாண்டு விழாவும் வேகமாக நெருங்கி வருகிறது. கடந்த ஜனவரி 1-ஆம் தேதி ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்புக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அமைப்பில் சேர ஏகப்பட்ட ரூல்ஸ்கள். அந்த அமைப்புக்காக வட்டம், மாவட்டம் என நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு விட்டனர். ஆனால் அவர் இன்னும் கட்சி தொடங்கவில்லை. எப்போது என்றும் தெரியவில்லை.
உரிதான சிரிப்பு
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை, வெற்றிடம் உள்ளதாக கூறிய ரஜினிகாந்த் இதுவரை கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும் போதெல்லாம் இன்னும் நேரம் வரவில்லை என்று கூறி விட்டு அவருக்கே உரிதான சிரிப்பை சிரித்து விட்டு சென்றுவிடுவார். இப்போது வெற்றிடமும் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. ஸ்டாலின் வந்து விட்டார், கமல் வந்து விட்டார்,, இதோ இப்போது விஷாலும் வந்து விட்டார். திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதி இடைத்தேர்தலில் ஆழம் பார்க்க ரஜினி போட்டியிட வேண்டும் என்பது ரசிகர்கள் அதாவது அவரது "காவலர்"களின் கோரிக்கையாகும். ஆனால் ரஜினியிடம் இருந்து இன்னும் எந்த சிக்னலையும் காணோம்.
பணிகளை செய்வேன்
இந்நிலையில் நடிகர் விஷால் மக்கள் நல இயக்கத்தை இன்று தொடங்கியுள்ளார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போலி ஆவணத்தை சமர்ப்பித்ததாக அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. எம்எல்ஏ ஆனால்தான் மக்கள் நல பணிகளை செய்ய முடியுமா, நான் அரசியலில் இல்லாமலேயே மக்கள் பணிகளை செய்வேன் என்ற விஷால் சொன்னதோடு சரி, அந்த பக்கம் தலைவைத்து கூட படுக்கவில்லை.
ரஜினி பக்கம்
நடிகர் சங்கத்திலும் மக்கள் மத்தியிலும் விஷாலுக்கு அந்தளவுக்கு நல்ல பெயர் இல்லை என்றாலும் கூட அவர் ஒரு இயக்கத்தைத் தொடங்கிவிட்டார். இதனால் விஷாலைப் பார்க்கும் மக்கள் அடுத்து ரஜினி பக்கம் திரும்பிப் பார்க்கிறார்கள்.
தீவிர அரசியல்வாதி
தற்போது ரஜினி சினிமாவில்தான் பிசியாக உள்ளார். மக்கள் பிரச்சினைகளில் குழப்பமான கருத்து தெரிவித்து கெட்ட பெயரை சம்பாதித்து விட்டு போய் விடுகிறார். எப்போது கட்சி ஆரம்பிப்பார். எப்போது தீவிர அரசியல்வாதியாக மாறுவார். என்ன செய்யப் போகிறார். ஏது செய்யப் போகிறார்.. என்னதான் செய்வார் என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள்..
டிசம்பர் மாதம் கூட்டத்தில் பேசிய ரஜினி, கட்சி, கொடி எல்லாம் ரெடி இனி அம்புவிடுவதுதான் பாக்கி என்றார்... ஆனால் அம்புதான் எப்பப் பாயும் என்று தெரியவில்லை!
ஒரிஜினல் "பாயும்புலி" அமைதியாக இருக்கிறது.. ஆனால் பாயும் புலி என்ற பெயரில் நடித்த விஷால் கிளம்பி விட்டார்!