விஷ்ணுப்பிரியாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது- இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
கடலூர்: தற்கொலை செய்து கொண்ட நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவின் உடல் கடலூர் கோண்டூரில் உள்ள பென்னையாற்று கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமான மாணவர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பியாக கடந்த 7 மாதமாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுப்பிரியா(27). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்தவர் விஷ்ணுப்பிரியா. மேலதிகாரிகளின் டார்ச்சர் காரணமாகவே விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
சிபிசிஐடி விசாரணை...
விஷ்ணுப்பிரியாவின் மரணம் தொடர்பாக பல்வேறு கட்சிகளும் சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
பொதுமக்கள் அஞ்சலி...
இதனிடையே, விஷ்ணுப்பிரியாவின் உடல் அவரது சொந்த ஊரான கடலூரை அடுத்த கொண்டூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக விஷ்ணுப்பிரியாவின் உடல் வைக்கப் பட்டிருந்தது.
எம்.எல்.ஏக்கள் அஞ்சலி...
விஷ்ணுப்பிரியாவின் உடலுக்கு பண்ருட்டி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து, விருத்தாசலம் எம்.எல்.ஏ. முத்துக்குமார், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. இல. புகழேந்தி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
காவலர்கள் மரியாதை...
இதேபோல், கடலூர் எஸ்பி விஜயகுமார் மற்றும் நான்கு டிஎஸ்பிக்கள் உள்ளிட்டோரும் மலர்வளையம் வைத்து விஷ்ணுப்பிரியாவின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
இறுதி ஊர்வலம்...
பொதுமக்கள் அஞ்சலியைத் தொடர்ந்து இன்று காலை 10.50 மணிக்கு விஷ்ணுப்பிரியாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் கடலூர் மாவட்ட பொதுமக்கள், , கல்லூர் - பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
கைது செய் கோஷம்...
அவர்கள் அனைவரும், "கைது செய் கைது செய், தமிழக அரசே கைது செய், விஷ்ணுப்பிரியாவின் மரணத்திற்கு காரணமாக எஸ்பி செந்தில்குமாரை கைது செய்'' என்று கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.
அடக்கம்...
பின்னர், விஷ்ணுப்பிரியாவின் உடல் கடலூர் கோண்டூரில் உள்ள பென்னையாற்று கரையில் அடக்கம் செய்யப்பட்டது.