"விஷ்ணுபிரியா ஆதரவு" நாமக்கல் கூடுதல் எஸ்.பி சென்னைக்கு திடீர் டிரான்ஸ்பர்!
நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏடி.எஸ்.பி.) சேவியர் பிரான்சிஸ் பெஸ்கி அதிரடியாக சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் தற்கொலை செய்துகொண்ட டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவுக்கு ஆதரவாக இருந்ததால் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா கடந்த 18ம் தேதி முகாம் அலுவலகத்தில் உள்ள குடியிருப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயரதிகாரியின் அழுத்தம், கொலை வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியின் மிரட்டல், என அவர் தற்கொலைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணம் சொல்லப்பட்டு வருகிறது.
அவருடைய தோழி கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரி, எஸ்.பி, டி.ஐ.ஜி. உள்ளிட்ட உயரதிகாரிகளின் அழுத்தம், கோகுல்ராஜ் கொலை வழக்கில் நேர்மையாகச் செயல்பட உயரதிகாரிகள் அனுமதிக்காததுமே விஷ்ணுபிரியாவின் தற்கொலைக்குக் காரணம் என வெளிப்படையாக ஊடகங்களிடம் கூறினார். இதையடுத்து, கீழக்கரை டி.எஸ்.பி மகேஸ்வரி மருத்துவ விடுப்பில் புதன்கிழமை சென்றுவிட்டார்.
சி.பி.சி.ஐ.டி விசாரணை
விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே ஒரு டிஎஸ்பி, 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை அறிக்கை அடுத்த சில தினங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
கூடுதல் எஸ்.பி மாற்றம்
இந்நிலையில், நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சேவியர் பிரான்சிஸ் பெஸ்கி, அயல் பணிக்காக சென்னையில் உள்ள நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு தலைமையகத்துக்கு புதன்கிழமை மாற்றப்பட்டுள்ளார். இவர் விஷ்ணுபிரியாவுக்கு ஆதரவாக இருந்ததால். மாற்றப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் எஸ்பி செந்தில்குமார் மீது நடவடிக்கை பாயுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
சென்னை புறப்பட்ட கூடுதல் எஸ்.பி
நாமக்கல் எஸ்பி செந்தில்குமாருக்கும், கூடுதல் எஸ்பிக்குமிடையே சரிவர கருத்து பரிமாற்றங்கள் கூட இல்லாத நிலை தான் இருந்துள்ளது. இந்நிலையில் கூடுதல் எஸ்பி சேவியர் பிரான்சிஸ் பெஸ்கி திடீரென இடமாற்றம் செய்ப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதற்கான உத்தரவு வந்த சில மணி ேநரத்தில் தனது பொறுப்புகளை மற்றொரு கூடுதல் எஸ்பியான சந்திரமோகனிடம் ஒப்படைத்து சென்றதாக கூறப்படுகிறது.
போலீஸ் அதிருப்தி
கூடுதல் எஸ்.பி சேவியர் பிரான்சிஸ் பெஸ்கி திடீரென இடமாற்றம் செய்தது போலீசார் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி உட்கோட்டங்களில் பணியாற்றும் குறிப்பிட்ட சில இன்ஸ்பெக்டர்கள் ரகசியமாக கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களில் சிலரும் அடுத்த ஓரிரு தினங்களில் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணை நடக்குமா?
இச்சம்பவத்தில் நாமக்கல் எஸ்பி செந்தில்குமார் மீது தான் விஷ்ணுப்பிரியா குடும்பத்தினர் உள்பட பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர். நாமக்கல்லை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூர்வாங்க விசாரணை மட்டுமே அவரிடம் நடத்தப்பட்டது. மீண்டும் விசாரணை நடக்குமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
ஏடிஜிபி நேரடியாக விசாரிக்க வலியுறுத்தல்
சிபிசிஐடி ஏடிஜிபி கரண் சின்ஹா மத்திய மண்டல காவல் துறைத் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், கண்டிப்பான அதிகாரி என்று பெயர் எடுத்தவர். இதனால், எஸ்.பி. நிலை அதிகாரி விசாரணை முடிவுற்ற பிறகு, மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் ஏடிஐõபி நேரடியாக விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் தற்கொலைக்கு உண்மையான காரணம் தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.