மலையாளிகள் கொண்டாடிய விஷூ பண்டிகை... கனி காணுதலும் கை நீட்டமும்...
மலையாளிகளின் புத்தாண்டு தினமான விஷூ சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் "தமிழ்ப் புத்தாண்டு" கொண்டாடப்படுவது போல கேரளாவில் விஷு பண்டிகை கொண்டாடப்படும். இதையொட்டி, சென்னையில் வசிக்கும் மலையாளிகள் நேற்று விஷூவை வெகுசிறப்பாக கொண்டாடினர்.
ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

கனி காணுதல்
பழங்கள் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் சுவாமிக்கு நேர்த்திக்கடனாக படைத்தனர். உறவினர்கள், நண்பர்களுடன் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

கைநீட்டம்
கோவில்களில் கை நீட்டம் வழங்கப்பட்டதைப் போல வீடுகளில் பெரியவர்கள் சிறுவர்களுக்கு காசு, பணத்தை கை நீட்டமாக கொடுத்தனர். இதைப்போல செல்வந்தர்கள் பலர் வறியவர்களுக்கு கை நீட்டம் அளித்தனர்.

பாரம்பரிய ஆடைகள்
மலையாள பெண்கள் பாரம்பரிய முறையில் புத்தாடை அணிந்து கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டனர். உற்றார் உறவினர்களுக்கு உற்சாகமாக புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

ஜெயலலிதா வாழ்த்து
விஷூ மலையாள புத்தாண்டு தினத்தையொட்டி மலையாள மக்களுக்கு மக்கள் முதல்வர் ஜெயலலிதா தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விஷு பண்டிகையன்று, மலையாள மக்கள் தங்களது இல்லங்களில் பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களின்படி அரிசி, காய் கனிகள், வெற்றிலை, பாக்கு, கண்ணாடி, கொன்றை மலர், தங்க நாணயங்கள், புத்தாடை ஆகியவற்றைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட `விஷுக் கனியை' விடியற்காலை எழுந்தவுடன் முதலில் கண்டு, புலரும் புத்தாண்டில் தங்களுக்கு எல்லா நலனும் வளமும் வழங்கிட வேண்டி இறைவனை வணங்கி வழிபடுவார்கள்.

ஏற்றம் தந்திடும் விஷூ
குடும்பத்தில் உள்ள இளையவர்களும், குழந்தைகளும் பெரியவர்களை வணங்கி அவர்களிடம் ஆசி பெறும் போது அன்புப் பரிசாக ‘விஷு கை நீட்டம்' என்னும் பணப் பரிசைப் பெற்று மகிழ்வார்கள். மலையாள மொழி பேசும் மக்கள் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடி வரவேற்கும் இப்புத்தாண்டு எல்லா வகைகளிலும் ஏற்றம் தந்திடும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications