நியூமரலாஜிப்படி ஜெ. பெயரிட்ட "தேவா"வுடன் விளையாடும் "கலா, மாலா".. சிசிடிவியில் பார்க்கலாம்
சென்னை: பார்வையாளர்களின் வேண்டுகோளுகிணங்க வண்டலூர் பூங்காவில் உள்ள நான்கு வெள்ளைப் புலிக்குட்டிகளை சிசிடிவி கேமராவில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பூங்காவில் உள்ள நம்ருதா எனும் வெள்ளைப்புலி அண்மையில் நான்கு ஆரஞ்சு நிற புலிகளை ஈன்றெடுத்தது. இந்தக் குட்டிகளை காண ஏற்பாடு செய்யுமாறு பூங்கா நிர்வாகத்திடம் பார்வையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து புலிக்குட்டிகள் இருக்கும் இடத்தில் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டு கணினித்திரையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தத்திரையின் மூலம் புலிக் குட்டிகளைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய அளவில் உள்ள பூங்காக்களில் வண்டலூரில் தான் இந்த வசதி முதன் முதலாக தொடங்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பூங்கா நிர்வாகி ஒருவர் கூறும்போது:
பூங்காவில் உள்ள நம்ருதா எனும் வெள்ளைப்புலி அக்டோபர் மாதம் 2 ஆண்குட்டிகளையும், 2 பெண் குட்டிகளையும் ஈன்றது. ஆண்குட்டிகளுக்கு தேவா,நகுலா என்றும்,பெண் குட்டிகளுக்கு கலா, மாலா என்றும் முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டினார் (நியூமராலஜிப்படி இந்தப் பெயர்களில் கூடுதலாக சில எஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது)
குட்டிகளை நேரடியாகக் காண அனுமதித்தால் தாய்ப்புலி கோபமடையும் வாய்ப்புள்ளது. இதனால் அங்கு விபரீதங்கள் ஏற்படக்கூடும். எனவேதான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக புலிக்குட்டிகள் வளர்ந்து தற்காப்பு வசதி பெற குறைந்தது ஓராண்டு ஆகும். அதன் பிறகே புதிய குட்டிகள் பார்வையாளர்களுக்காக திறந்தவெளி அடைப்பிடங்களில் விடப்படும் என்றார்.