தீவிரமடையும் பார்வையற்ற பட்டதாரிகளின் உண்ணாவிரதம்… கைதும், விடுதலையும்
சென்னை: நாங்கள் பார்வையற்றவர்கள்... எங்களுக்கு வாழ்க்கையே இருட்டாகிவிட்டது. வேலைதான் எங்களுக்கு வெளிச்சம் கொடுக்கும். அந்த வேலையை கொடுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம் என்பது பார்வையற்ற பட்டதாரிகளின் கோரிக்கையாகும்.
சாலைமறியல் ஒருபுறம்... உண்ணாவிரதம் மறுபுறம் என இவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாத காவல்துறையினர் அவர்களை குண்டு கட்டாக தூக்கிக் கொண்டு போய் வேன்களில் ஏற்றிச் செல்கின்றனர். சிலமணிநேரங்களில் அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் எதைப்பற்றியும் கலங்காமல் மீண்டும் அவர்கள் தங்களின் போராட்டத்தைத் தொடர்கின்றனர். கடந்த சில தினங்களாகவே சென்னை ராஜாஜி சாலையையும், கடற்கரை சாலையையும் ஸ்தம்பிக்கச் செய்கின்றனர் இவர்கள்.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வைதிறன் குறைந்த பட்டதாரிகள் சென்னையில் கடந்த 9 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
மறியல், உண்ணாவிரதம்
கடந்த 10 நாட்களாக சென்னை முழுவதும் சாலை மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் இதில் 7 ஆண்கள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 9ஆம் தேதி தொடங்கினர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நேற்றுமுதல் 7 பெண்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் ஆதரவு
இரண்டாவது நாளாக இன்று அவர்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு, அனைத்து மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம் ஏன்?
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டு பணி ஆணை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் இந்த தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஆசிரியர் தகுதிதேர்வு தங்களுக்கு நடத்தப்பட வேண்டும் என்றும் அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட வேண்டும் என்றும் சாலைமறியல், உண்ணாவிரத போராட்டம், முற்றுகை போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து வந்தனர்.
சிறப்பு தகுதித் தேர்வு
இதை தொடர்நது தமிழக அரசு சார்பில் கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் அவர்களுக்கு என தனி சிறப்பு தகுதித்தேர்வை நடத்தியது. இதில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இதில் பார்வையற்றவர்களும் உள்ளடக்கியது. ஆனால் இவர்களில் 350 பார்வையற்ற பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றனர். ஆனால் இவர்களில் 50 பேருக்கு மட்டுமே பணி ஆணை வழங்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ளவர்களுக்கு வெயிட்டேஜ் காரணம் காட்டி அவர்கள் 300 பேரும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வரை சந்திக்கும் வரை
எனவே இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகளுடன் தகவல் கேட்கும் உரிய பதில் தரவில்லை என்றும், எனவே முதல்வரை சந்தித்தால் மட்டுமே தங்களுடைய குறைகளை தீர்க்கப்படும் என்று உறுதியாக நம்பும் அவர்கள், முதல்வரை சந்திக்கும் தங்களுடைய போராட்டம் முடியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கைதாகி விடுதலை
இதனிடையே சென்னையில் மறியல் போராட்டத்தில்ர ஈடுபட்டு கைதான பார்வையற்றோர் 97 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கே.கே.நகரில் மறியலில் ஈடுபட்டோர் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்தனர். கைது செய்யப்பட்டோரை சந்தித்து ஆதரவு தெரிவிக்க திமுக-வினர் திரண்டு வந்தனர். முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆயிரம் பேர் குவிந்த காரணத்தால் பார்வையற்றோரை போலீசார் விடுதலை செய்தனர்.
உடல்நலம் பாதிப்பு
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் அரசு விருந்தினர் மாளிகை அருகே 9 நாளாக உண்ணாவிரதம் இருந்தவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 7 ஆண் பட்டதாரிகளின் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது. டிபிஐ வளாகத்தில் பார்வையற்ற பெண் பட்டதாரிகளின் உண்ணாவிரதம் தொடர்கிறது.