வெள்ளம்.. குடிசைவாசிகளை வீட்டில் தங்கவைத்து சாப்பாடு போடும் விஸ்வநாதன் ஆனந்த்
சென்னை: சதுரங்க ஆட்டக்காரர் விஸ்வநாதன் ஆனந்த் சென்னையிலுள்ள தனது வீட்டில் மழையால் பாதிக்கப்பட்ட குடிசைவாசிகள் தங்குவதற்கு இடம் கொடுத்து உதவியதோடு, உணவும் சமைத்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.
உலகின் முன்னணி செஸ் ஆட்டக்காரர் விஸ்வநாதன் ஆனந்தின் வீடு சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ளது. அந்த பகுதி வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஆனால் பக்கத்து ஏரியாவிலுள்ள குடிசை பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துவிட்டது.
India's golden 5 pic.twitter.com/iCGjKGQsLv
— Viswanathan Anand (@vishy64theking) November 13, 2015
எனவே குடிசையில் இருந்த மக்கள் பலருக்கு ஆனந்த் வீட்டில் அடைக்கலம் தரப்பட்டுள்ளதாம். லண்டன் செஸ் தொடரில் ஆடிவருவதால் ஆனந்த் தற்போது சென்னையில் இல்லை. இருப்பினும், அவரது மனைவி அருணா, ஏழைகளுக்கு உதவும் பணிகளை செய்து வருகிறார்.
ஆனந்த் வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்கார பெண்மணி வீடு மற்றும், பொருட்களை வெள்ளம் கபளீகரம் செய்து சென்றுவிட்டதாம். அந்த வேலைக்கார பெண்மணி தனது உறவுக்காரர்களோடு, ஆனந்த் வீட்டில் தங்கியுள்ளார். அப்பகுதி குடிசைவாசிகள் பலரையும் அழைத்து வந்துள்ளார். அவர்கள் அனைவருக்கும் ஆனந்த் வீட்டில் சாப்பாடு சமைத்து கொடுக்கப்படுகிறது.
இதுதவிர, தன்னார்வலர்கள் மூலம், சாப்பாடு பிற பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனந்தின் 4 வயது மகன், அகில், தனக்கு கொடுக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த தின்பண்டங்களை குடிசைபகுதி குழந்தைகளுக்கும் கொடுத்து மகிழ்கிறான்.