விவேக்கை குறி வைத்துதான் இன்கம்டேக்ஸ் ரெய்டு நடத்தப்பட்டதாம்.. வெளியாகும் திடுக் தகவல்!
ஜெயா டிவியின் சிஇஓ விவேக் ஜெயராமனை குறி வைத்தே இந்த இன்கம்டெக்ஸ் ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை: ஜெயா டிவியின் சிஇஓ விவேக் ஜெயராமனை குறி வைத்தே இந்த இன்கம்டெக்ஸ் ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழகம், கர்நாடகா என சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் நிறுவனங்கள் என 180க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 5 நாட்களாக சோதனை நடத்தினர்.
இதில் ஏராளமான ஆவணங்கள், நகைகள் மற்றும் கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. வரி ஏய்ப்பு புகாரை நிருபிக்கும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இளவரசியின் மகன்
இந்நிலையில் ஜெயா டிவியின் சிஇஒவும் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமன் வீட்டில் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற சோதனை இன்று நிறைவடைந்தது.
அலசி ஆராய்ந்த ஐடி அதிகாரிகள்
விவேக் வீட்டு தண்ணீர் தொட்டி, அவரது சொகுசு கார்கள் என எதையும் விடாமல் சலித்து எடுத்தனர் வருமான வரித்துறை அதிகாரிகள். சோதனை நிறைவடைந்த நிலையில் விவேக்கை வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அசுர வேகத்தில் உயர்ந்த சொத்து
இந்நிலையில் விவேக்கை குறி வைத்துதான் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அசுர வேகத்தில் விவேக்கின் சொத்து மதிப்பு உயர்ந்ததே வருமான வரித்துறையின் இந்த அதிரடி சோதனைக்கு காரணம் என கூறப்படுகிறது.
மெகா சோதனை
1000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜாஸ் சினிமாஸை விவேக் வாங்கியது எப்படி? என்றும் அதற்கு எங்கிருந்து பணம் வந்தது என்பதையுமே குறியாக வைத்து இந்த மெகா சோதனை தொடங்கப்பட்டுள்ளது.
விசாரணை வளையத்துக்குள்
27 வயதான விவேக்கிற்கு இவ்வளவு சொத்து எப்படி வந்தது? பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கவும் சொகுசு கார்கள் பல வாங்கவும் பணம் எப்படி வந்தது என்பதை மையமாக வைத்தே சசிகலா குடும்பத்தை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்ததாம் வருமான வரித்துறை.
விவேக்தான் சென்டர் பாயின்ட்
மேலும் ஆரம்பத்தில் இருந்து ஜெயலலிதா, சசிகலா உடன் இருந்தவர் விவேக். இருவரின் சொத்துப் பட்டியல் குறித்தும் விவேக்கிற்கு நன்றாக தெரியும் என்பதால் அவரை சென்டர் பாயின்ட்டாக வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.