அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற ஜெயலலிதாவை விவேக் பார்க்கவில்லையா?
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற ஜெயலலிதாவை விவேக் பார்க்கவில்லை என விசாரணை கமிஷனில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற ஜெயலலிதாவை விவேக் பார்க்கவில்லை என விசாரணை கமிஷனில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 75 நாள் சிகிச்சைக்குப் பிறகு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது.
அவரது மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் இளவரசியின் மகனும் ஜெயா டிவி சிஇஓவுமான விவேக்கிற்கு கடந்த 9ஆம் தேதி சம்மன் அனுப்பியது.
3 மணி நேரம் விசாரணை
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி கமிஷனில் இளவரசியின் மகன் விவேக் இன்று ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணிநேரம் விசாரணை ஆணையர் ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார்.
விவேக் மறுப்பு
அப்போது ஜெயலலிதா குறித்து அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் கேள்விகளை தெரிவிக்க விவேக் மறுத்துவிட்டார்.
ஜெ.வை பார்க்கவில்லை
வரும் 28 ஆம் தேதி விசாரணை கமிஷனில் மீண்டும் ஆஜராக வேண்டும் என தெரிவித்தார். இந்நிலையில் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது அவரை சந்திக்கவில்லை என விவேக் விசாரணை கமிஷனில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர்களுக்கும் அனுமதியில்லை
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது அமைச்சர்கள் யாரும் அவரை பார்க்கவில்லை என தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள், ஆளுநர், அப்போதைய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலரும் மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவை பார்க்காமலேயே திரும்பினர்.
விவேக்கும் பார்க்கவில்லை
சசிகலா மட்டுமே ஜெயலலிதாவை பார்த்துக்கொண்டதாகவும் வேறு யாரையும் பார்க்க அவர் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பாசத்திற்கு உரிய, அவரால் வளர்க்கப்பட்ட விவேக் கூட ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.