என்.ஆர்.ஐ. கோட்டாவில் மோசடி- தவறு இருந்தால் நடவடிக்கை எடுங்கள்: விவேக் ஜெயராமன்
என்ஆர்ஐ கோட்டாவில் மோசடி செய்ததில் தவறு இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்று விவேக் ஜெயராமன் அறிக்கை அனுப்பியுள்ளார்.
சென்னை: என்ஆர்ஐ கோட்டாவில் சட்டம் படித்த விவகாரத்தில் என் மீது தவறிருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்று விவேக் ஜெயராமன் அறிக்கை அனுப்பியுள்ளார்.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் விதிகளை மீறி வெளிநாடு வாழ் இந்தியருக்கான ஒதுக்கீட்டில் விவேக் ஜெயராமனுக்கு 3 ஆண்டு எல்.எல்.பி. படிப்பு படிக்க அனுமதி அளிக்கப்பட்டதாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார், விவேக்கிற்கு எதிராக கருத்துகளை தெரிவித்திருந்தார். இதுகுறித்து விவேக் ஜெயராமன் விளக்கம் அளித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில் நான் என்ஆர்ஐ கோட்டா மோசடியில் என் மீது தவறு இருந்தால் தாராளமாக நடவடிக்கை எடுங்கள்.
அனுமதி மறுப்பு
சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற எனது சகோதரி மூலம் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவில் படித்தேன். வெளிநாடு வாழ் இந்தியர் என்ற பிரிவின் சான்றிதழை கொடுத்தே கல்லூரியில் சேர்ந்தேன். கல்லூரியில் சேர்ந்ததற்கான அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க தயாராக உள்ளேன். உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறியிருந்தால் எனக்கு குறிப்பிட்ட பிரிவின் கீழ் கல்லூரியில் சேர அனுமதி மறுக்கப்பட்டிருக்கும்.
அவதூறு
சட்டப்படிப்பில் சேர்ந்த சில நாட்களிலேயே டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாலும், வேறு சில வேலைகளாலும் படிப்பைத் தொடர முடியாமல் விலகிவிட்டேன். அப்படியிருந்த நான் முறைகேடாக சீட் வாங்கியதாக சிலர் வேண்டுமென்றே விஷமத்தனமான தகவல்களை உண்மைக்கு மாறான அவதூறுகளை உள்நோக்கத்தோடு பரப்புவது கொஞ்சமும் நியாயமற்றது, அடிப்படை உண்மைக்கு மாறானது.
அநாகரிகம்
மூத்த அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார் இதுகுறித்து ஆதாரங்களையோ உண்மைகளையோ கொஞ்சமும் விசாரிக்காமல் கடுமையான வார்த்தைகளால் என்னையும், என் குடும்பத்தையும் அநாகரிகமற்ற முறையில் விமர்சித்து இருக்கிறார். தாராளமாக அமைச்சர் ஜெயக்குமார் என்னை கைது செய்து நடவடிக்கைகளையும் எடுக்கட்டும். நான் சட்டப்பூர்வமாக சந்திக்க தயாராக உள்ளேன்.
தான்தோன்றித்தனமான பேச்சு
ஆட்சியும் அதிகாரமும் இருப்பதால் யாரையும் எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என நினைக்கிறார் அமைச்சர். இதுபோன்ற மிரட்டல்களுக்கு ஒரு போதும் பயப்படுதகிற நபர் நான் இல்லை. எத்தகைய மிரட்டல்களையும் சட்டப்பூர்வமாகச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். அதே நேரம், ஒரு பிரச்சினையின் உண்மைத்தன்மையை அறியாமல் தான் வகிக்கின்ற பொறுப்பை மறந்து தான் தோன்றித்தனமாக அவர் பேசுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
சான்றிதழுக்காக அல்ல
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கற்றுக் கொடுத்த கண்ணியத்தைப் பின்பற்றுபவராக ஜெயக்குமார் நடந்துகொள்வதுதான் அவர் வகிக்கும் பதவியின் மாண்புக்குச் சிறப்பு. இந்த விவகாரத்தில் என் மீது குற்றம்சுமத்த எள் அளவு ஆதாரமும் இல்லாத நிலையில் நான் சமர்ப்பித்த சான்றிதழ்களை ஜெயக்குமார் மறைத்து வைத்து கொண்டு என் மீது பழி போடுகிறாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. என்னால் அரசியல் ரீதியான சர்ச்சைகள் உருவாகிவிடக் கூடாது எனஅபதில் மிக கவனமாக இருக்கும் நான் சட்டப்படிப்பை மேற்கொள்வதில் எப்படி கவனம் ில்லாமல் செயல்பட்டிருப்பேன். பெயருக்கு பின்னால் போதுமான பட்டங்களைப் போட்டுக் கொள்கிற அளவுக்கு நன்கு படித்த நான், தனிப்பட்ட ஆர்வத்தினாலேயே சட்டப்படிப்பில் சேர்ந்தேன். வெறும் சான்றிதழுக்காக சேர்ந்தவன் நான் அல்ல.
அனுபவத்துக்கு இழுக்கு
இதுகுறித்த எந்த உண்மைகளையும் அறியாமல் என் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் தேவையில்லாமல் என்னையும் என் குடும்பத்தையும் அவமானப்படுத்துவது போல் ஜெயக்குமார் பேசி இருக்கிறார். இதன் மூலமாக, அவருடைய இத்தனை ஆண்டுகால அரசியல் அனுபவத்துக்கு அவரே இழுக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். மீடியாவில் தன் முகம் தெரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக எல்லோரையும் சீண்டுவது போல் என்னையும் சீண்டி இருக்கிறார்.
எச்சரிக்கை
எனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை மட்டுமே செய்து கொண்டு எவருடைய விஷயங்களிலும் தலையிடாமல் இருந்து வருகிறேன். ஜெயலலிதாவின் வளர்ப்பாக, பெரியோர்களை மதித்துக் கண்ணியம் காக்கும் பண்போடு இருக்கிறேன். ஆனாலும் நாகரிகமற்ற விமர்சனங்களை என்னால் இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. என் பெயரைச் சொல்லி என் குடும்பம் அவதூறுக்கு ஆளாகும் நிலையை இனி எவர் ஏற்படுத்தினாலும் அதற்கான ச்டட விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை எச்சரிக்கையாகச் சொல்லி கொள்கிறேன் என்று விவேக் கூறியுள்ளார்.