அரசியலுக்கு வர ஆயத்தமாகும் விவேக்... குலதெய்வ கோவிலில் கிடா வெட்டி பூஜை
குல தெய்வ கோவிலில் கிடா வெட்டி விருந்து கொடுத்துள்ளார் விவேக் மாமனார். எல்லாம் மருமகனை அரசியலில் முன்னிலை படுத்துவதற்குத்தானாம்.
Recommended Video
தஞ்சாவூர்: வருமானவரி சோதனைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட விவேக் அரசியலுக்கு வர ஆயத்தமாகிவிட்டதாகவே தெரிகிறது. முதற்கட்டமாக குலதெய்வ கோவிலில் கிடா வெட்டி பிரம்மாண்டமாக கிடா வெட்டி விருந்து கொடுத்துள்ளனர்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு கடந்த ஓராண்டாகவே ஆடிப்போயுள்ளது சசிகலா குடும்பம். அடுத்தடுத்த மரணங்கள், வழக்குகள் என ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
இளவரசி குடும்பமோ அரசியலுக்கு வர ஆயத்தமாகி வருகிறது. இளவரசியின் மகன் விவேக் ஜெயாடிவி, ஜாஸ் சினிமாஸ் நிறுவனங்களின் சிஇஓவாக இருக்கிறார். விவேக்கை பல சொத்துக்களுக்கு பொறுப்பாளராக நியமித்துள்ளார் சசிகலா.
மோதல் போக்கு
விவேக் முன்னிலைப்படுத்தப்படுவது தினகரனுக்கு பிடிக்கவில்லை. விவேக் திருமணத்திற்குப் பிறகு பல பொறுப்புகள் அவரை நாடி சென்றுள்ளது. குறிப்பாக ஜெயாடிவி பொறுப்பு விவேக் வசம் சென்றது பிடிக்கவில்லை. இப்போது அவரை கேட்காமல்தான் பேட்டிகள், செய்திகள் ஒளிபரப்பாகி வருகின்றனர். துரைமுருகன் பேட்டி ஒளிபரப்பானதில் கடும் கோபத்தில் இருக்கிறார் தினகரன்.
குல தெய்வ கோவில் வழிபாடு
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மதுக்கூர் அருகே கல்யாண ஓடை கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன், ஜெயா ஆகியோரின் மகளான கீர்த்தனாவை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். விவேக் மாமனார் பாஸ்கரனின் குல தெய்வ கோயில் மதுக்கூர் அருகே கல்யாண ஓடை கிராமத்தில் உள்ள ஆதியப்ப சுவாமி கோயில், பத்திரகாளியம்மன் கோயில் ஆகும்.
பிரம்மாண்ட வரவேற்பு
இரு தினங்களுக்கு விவேக், மனைவி கீர்த்தனா, மாமனார் பாஸ்கரன் மற்றும் நெருங்கிய உறவினர்கள் 50க்கும் மேற்பட்டவர்களுடன் கல்யாண ஓடை கிராமத்திற்கு வந்தார். அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். இத்தனை நாட்கள் இல்லாத விதமாக விவேக்கிற்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு பலரையும் பேச வைத்தது.
விவேக்கிற்காக பூஜை
விவேக் மாமனார் தனது குலதெய்வ கோயிலில் 15க்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி பூஜைகள் செய்து விருந்து கொடுத்தனர். இதில் விவேக் மற்றும் மாமனாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்த பூஜையே விவேக்கிற்காக நடத்தப்பட்ட பூஜையாம்.
மாமனாரின் குல தெய்வம்
கடந்த வருடம் தான் எனக்கு திருமணம் ஆனது. அதன் பிறகு இப்போதுதான் மாமனார் வீட்டின் குலதெய்வ கோயிலுக்கு வழிபாட்டிற்காக வந்துள்ளேன் என்றார். ஜெயலலிதா மறைந்து ஓராண்டு நிறைவிற்குப் பின்னர் இந்த கிடாவெட்டு நடந்துள்ளது என்றார்.
வருமானவரி சோதனை
ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில்தான் நான் சிறு வயதில் இருந்து வளர்ந்தேன். எங்களுக்கு மட்டும் அல்ல, கோடிக்கணக்கான தொண்டர்களுக்கு ஜெயலலிதாவின் வீடு கோயில் போன்றது. அந்த வீட்டிற்குள் சோதனை என்கிற பெயரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்து சோதனை செய்தது மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது.
சிக்கல்கள் தீர பூஜை
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எனது அத்தை சசிகலா, எனது தாயார் இளவரசி ஆகியோர் சிறைக்கு சென்றனர். அதனை தொடர்ந்து எங்கள் குடும்பத்தினர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டுளோம். சிக்கல்கள் விரைவில் தீரும்.
பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ள எங்கள் குடும்பத்தினருக்கு அமைதி கிடைக்க எனது மாமனார் குலதெய்வ கோயிலுக்கு வருமாறு அழைத்தார். எனவே இங்கு வந்து வழிபாடு நடத்தினோம் என்று கூறினார் விவேக்.
கிடா வெட்டு ஏன்?
சொத்து குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலா, இளவரசி விடுதலை பெற வேண்டி பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினோம் என்றும் கூறினார். என்னதான் சிறை விடுதலைக்காக வழிபாடு என்று விவேக் சொன்னாலும் நடந்த விசயங்கள் எல்லாம் விடுதலைக்காக மட்டுமல்ல மருமகன் விவேக்கை அரசியலில் முன்னிலை படுத்துவதற்காக கிடாவெட்டு விருந்தாகவே இது இருக்கிறது என்று பேசிக்கொள்கின்றனர் மன்னார்குடி வகையறாக்கள்.