வக்கீல் அமலநாதன் நேரில் ஆஜர்… ஐடி அதிகாரிகள் துருவி துருவி விசாரணை
ராம்மோகன் ராவ் மகனின் நண்பர் வக்கீல் அமலநாதன் இன்று வருமானவரித் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
சென்னை: முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவின் மகன் விவேக்கின் நண்பர் வக்கீல் அமலநாதன் இன்று வருமானவரித் துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் வீடு, அவரது மகன் விவேக் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 13 இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் பல கோடி ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதனையடுத்து, ராம்மோகன் ராவின் பதவியும் பறிபோனது.
இதனையடுத்து, ராம்மோகன் ராவ் மகன் விவேக்கிடம் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் அவரது நெருங்கிய நண்பரான சென்னை ஐகோர்ட்டு வக்கீல் அமலநாதன் வீட்டையும் வருமானவரித் துறையினர் திடீரென சோதனை நடத்தினார்கள். அப்போது, அமலநாதன் வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும், தங்க நகைகள், கம்யூட்டர், ஹார்ட் டிஸ்க், பென் டிரைவர், ஒப்பந்தங்கள் தொடர்பான பல்வேறு ஆவணங்கள், கோப்புகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் வக்கீல் அமலநாதன் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பட்டது. அதன்படி இன்று பிற்பகல் வக்கீல் அமலநாதன் வருமானவரித் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அமலநாதனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையில் முடிவில், மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்கக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.