வருமான வரித்துறை அலுவலகத்தில் விவேக்கிடம் 4 மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை
ஜெயா டிவி, வீடு ஆகியவற்றில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் விவேக்கிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
Recommended Video
சென்னை: ஜெயா டிவியை நிர்வகித்து வரும் இளவரசி மகன் விவேக்கிடம் வருமான வரித்துறை அலுவலகத்தில் வைத்து 4 மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து விவேக் வீட்டுக்குப் புறப்பட்டு சென்றார்.
சசிகலா குடும்பத்தின் 355 பேரை இலக்கு வைத்து இமாலய வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. கடந்த 5 நாட்களாக இந்த விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில் ஜெயா டிவியை நிர்வகித்து வரும் ஜாஸ் சினிமாஸ் உரிமையாளர் விவேக், அவரது சகோதரி கிருஷ்ணப்பிரியா, திவாகரன் ஆகியோர் பிரதான இலக்காக இருந்தது. கிருஷ்ணப்பிரியா, விவேக் வீடுகளில் 5 நாட்களாக இன்றும் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் இன்று திடீரென மாலை விவேக்கை வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அரைமணிநேரத்துக்குப் பின்னர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்துக்கு விவேக் கொண்டுவரப்பட்டார்.
அங்கு விவேக்கிடம் 4 மணிநேரம் துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது. இந்த கிடுக்குப்பிடி விசாரணையில் பல இடங்களில் விவேக் திணறியதாகவும் கூறப்படுகிறது. 4 மணிநேர விசாரணைக்குப் பின் இரவு 10 மணியளவில் விவேக் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.